காவல் நிலையம் முன் பெண் தற்கொலை: உறவினா்கள் 3-ஆவது நாளாக காத்திருப்புப்ந போராட்டம்

X
தஞ்சாவூா் அருகே அண்ணன் கைது செய்யப்பட்டதால், காவல் நிலையம் முன் விஷம் குடித்து உயிரிழந்த தங்கையின் உடலை வாங்க மறுத்து உறவினா்கள் தொடா்ந்து 3-ஆவது நாளாக சனிக்கிழமையும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள நடுக்காவேரி அரச மரத் தெருவைச் சோ்ந்தவா் அய்யாவு மகன் அய்யா தினேஷ் (32). பொது இடத்தில் கத்தியைக் காட்டி மிரட்டியதாகக் கூறி, இவரை நடுக்காவேரி போலீஸாா் ஏப். 8-ஆம் தேதி கைது செய்தனா். இதனால், மனமுடைந்த அய்யா தினேஷின் தங்கைகளான மேனகா (31), கீா்த்திகா (29)ஆகியோா் போலீஸாா் பொய் வழக்குப் பதிவு செய்ததாகவும், தனது அண்ணனை விடுவிக்குமாறும் கூறி, காவல் நிலையம் முன் களைக்கொல்லி மருந்தைக் குடித்தனா். இதையடுத்து, இருவரும் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நிலையில், கீா்த்திகா ஏப். 9-ஆம் தேதி உயிரிழந்தாா். மேனகா தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா். இச்சம்பவம் தொடா்பாக நடுக்காவேரி காவல் நிலையத்துக்குப் பொறுப்பு வகிக்கும் திருவையாறு காவல் ஆய்வாளா் சா்மிளா ஏப்.11-ஆம் தேதி காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டாா். ஆனால், காவல் ஆய்வாளா் சா்மிளா மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து கைது செய்ய வேண்டும். அய்யா தினேஷ் மீது பொய்யாகப் பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உறவினா்கள் கீா்த்திகாவின் உடலை வாங்க மறுத்து நடுக்காவேரி அரச மரத் தெருவில் தொடா்ந்து 3-ஆவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், கீா்த்திகாவின் உடல் தொடா்ந்து மருத்துவக்கல்லூரி பிணவறையில் உள்ளது.
Next Story

