திருச்செங்கோட்டில் உதவித் தொகையை உயர்த்தி வழங்க கோரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் 44 பேர் கைது
Tiruchengode King 24x7 |12 Feb 2026 3:22 PM ISTதிருச்செங்கோட்டில் உதவித் தொகையை உயர்த்தி வழங்க கோரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகள் சங்கத்தின் சார்பாக மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் 10 பெண்கள் உட்பட 44 பேர் கைது செய்யப்பட்டனர்
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகள் சங்கம் சார்பாக தமிழகம் முழுவதும் மாற்றத்திறனாளிகளுக்கு உதவித் தொகையை 1500 ரூபாயிலிருந்து 6000 ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தி வழங்க வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கடந்த மூன்று நாட்களாக மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்று பலர் சிறைக்கு சென்றனர். இன்று வட்டார தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு மாற்று திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகள் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில்திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடைபெற்றது. ஆந்திராவில் வழங்குவது போன்று மாற்றுத்திறனாளிகளுக்கு 6 ஆயிரம் ரூபாயும், அதிகமாக பாதிக்கப்பட்டவருக்கு பத்தாயிரம் ரூபாயும், படுத்த படுக்கையாக உள்ளவருக்கு 15 ஆயிரம் ரூபாயும் வழங்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.கோஷங்கள் எழுப்பிக் கொண்டிருந்த மாற்றுத்திறனாளிகள் திடீரென திருச்செங்கோடு பரமத்தி வேலூர் சாலையில் சிறிது நேரம் மறியல் போராட்டம் செய்தனர். மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இது குறித்து சங்கத்தின் மாவட்ட தலைவர் முருகேசன் கூறும் போது ஆந்திராவில் வழங்குவது போன்று 6000 ரூபாய் உதவித்தொகை தமிழக அரசு வழங்க வேண்டும். கடந்த ஓராண்டாக பல்வேறு போராட்டங்களை நடத்தியும் எங்களுக்கு எந்த விடிவும் ஏற்படவில்லை. நீங்கள் உதவித்தொகை உயர்த்தி வழங்கும் வரை போராட்டம் தொடரும் என்று கூறினார். இந்த போராட்டத்தில் பத்து பெண்கள் உட்பட 44 மாற்று திறனாளிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திகைது செய்யப்பட்டனர் கைது செய்யப்பட்டவர்கள் சற்று நேரம் தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டு உடனடியாக விடுதலை செய்யப்பட்டனர்
Next Story


