நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் மியாவாக்கி காடு! 500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு!

இந்த அடர்வனம் அமைக்கும் பணியில் நாமக்கல்,சேலம், கரூர், திருச்சி மாவட்டங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மரக்கன்றுகளை நட்டனர். அனைவருக்கும் மஞ்சப்பை வழங்கப்பட்டது.
நாமக்கல் பவுல்டரி டவுன் ரோட்டரி சங்கம், பவுல்டரி டவுன் இன்னர்வீல் சங்கம் மற்றும் மாவட்ட தேசியப் பசுமைப்படை இணைந்து நடத்திய மியாவாக்கிக்காடு (அடர்வனம்) உருவாக்கும் விழா, நாமக்கல், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடந்தது.சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கல்வி மற்றும் தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ரகுநாத் வரவேற்றார். பவுல்டரி டவுன் ரோட்டரி சங்கத்தலைவர் பிரபாகரன், இன்னர்வீல் சங்கத்தலைவி புவனேஸ்வரி, நாமக்கல் மாநகராட்சி சுகாதார அலுவலர் திருமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாமக்கல் மாநகராட்சி மேயர் கலாநிதி, ரோட்டரி மாவட்ட முன்னாள் கவர்னர் சரவணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் முனைவர் செல்வம் தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில், நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் வளாகத்தில் 5,400 சதுர அடி கொண்ட மியாவாக்கி காட்டில், நாமக்கல் மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை உரக்கிடங்கில் இருந்து பெறப்பட்ட குப்பை 3×3 ஆழத்தில் போடப்பட்டு அதில் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்படுகின்றன. இன்றைய நிகழ்ச்சியில் சொர்க்கம், சவுக்கு, மகிழம், மலைவேம்பு, ஏழிலைபாலை, கருநொச்சி, ராம்புட்டான், சப்போட்டா, ஊட்டி ஆப்பிள், கிலாக்காய், விளாம்பழம், பட்டர் பழமரம், வாட்டர் ஆப்பிள், சாத்துக்குடி, கோண புளியமரம், நாட்டு அத்தி, செம்மரம், பாதாம், சந்தனம், பட்டை, ஆப்பிரிக்கன் கயா, முழு நெல்லி, நாட்டு நெல்லி, சீதாப்பழ மரம், பலா, நாவல், தேக்கு, மாதுளை, பூவரசு, நார்த்தங்காய், மகாகனி, செம்மரம், புங்கை, வேங்கை, மாமரம், எலுமிச்சை முள்சீதா மரம், கொய்யா, இலுப்பை, புளியமரம், புன்னை, தகர மரம், வேம்பு, மாமரம், அரசமரம், சர்க்கரை பழ மரம், நெட்டியலிங்கம், ஆடுதொடா பாலை போன்ற 48 இனங்களை சேர்ந்த 500 மரக்கன்றுகள் நடப்பட்டன.
இதுகுறித்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் முனைவர் செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது....
மியாவாக்கிக்காடுகள், 3க்கு 3 அடியில்,நாட்டு தாவர இனங்களை அடர்த்தியாக நட்டு அடர்வனத்தை உருவாக்கும் முறையாகும்.நெருக்கமாக தாவரங்களை நடுவதால் உணவு தயாரிக்க, சூரிய ஒளியின் தேவைக்காக அவைகள் போட்டிப்போட்டுக் கொண்டு வேகமாக வளர்கின்றன. பல்வேறு இலையடுக்குகள் உருவாவதால், காட்டின் ஈரம் ஆவியாகாமல் தடுக்கப்படுகிறது. தாவரங்களின் வேர்கள் நெருக்கமாக வளர்ந்து, நிலத்தின் ஈரம் காக்கப்படுகிறது. இதனால், மண்ணின் வளம் அதிகரிக்கும். அதிகப்படியான கார்பன்டை ஆக்ஸைடு ஒளிச்சேர்க்கைக்காக உறிஞ்சப்படுவதால், வளிமண்டலத்தில் வெப்பம் குறையும்.
அடர்வனம் இருக்கும் இடத்தில், நுண்ணிய காலநிலை வேறுபாடு காணப்படும்.பறவைகள் தங்குவதற்கு வாழிடம் கிடைக்கும்.பறவைகளுக்கு பழங்கள் உணவாகக் கிடைக்கும். வவ்வால்கள், தேனீக்கள், வண்ணத்துப் பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.அதன் காரணமாக, விவசாயப் பயிர்களில் மகரந்தச்சேர்க்கை நடப்பதால், விவசாய மகசூல் அதிகரிக்கும் என்று அவர் கூறினார்.
இந்த அடர்வனம் அமைக்கும் பணியில் நாமக்கல்,சேலம், கரூர், திருச்சி மாவட்டங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மரக்கன்றுகளை நட்டனர். அனைவருக்கும் மஞ்சப்பை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன ஆசிரியர்கள் பணியாளர்கள், நாமக்கல், சேலம், கரூர், திருச்சி மாவட்ட ஆசிரியர்கள், ரோட்டரி சங்க நிர்வாகிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
Next Story