ஆமரு வியப்பன் பெருமாள் கோயில் தேரோட்டம்

ஆமரு வியப்பன் பெருமாள் கோயில் தேரோட்டம்

தேரழுந்தூர் தேரோட்டம்  

உபரிசரவசு மன்னனின் செருக்கை கண்ணபிரான் அடக்கிய தேரழுந்தூரில் அமைந்துள்ள பழமை வாய்ந்த  ஆமருவியப்பன் பெருமாள் கோயில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே தேரழுந்தூரில் பழமை வாய்ந்த செங்கமலவல்லி உடனாகிய ஸ்ரீஆமருவியப்பன் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. உபரிசரவசு என்ற மன்னன் வானில் தேரில் வரும்போது தேரின் நிழல் எதன் மீது பட்டாலும் அது கருகிவிடும்படி வரம் பெற்று இருந்தான். ஒருமுறை அந்த மன்னன் மேலே சென்றபோது தேரின் நிழல் கண்ணனின் மீதும், அவர் மேய்த்துக் கொண்டிருந்த பசுக்களின் மீதும் பட்டது. இதனால் பசுக்கள் துன்பம் அடைந்தன. இவனது செருக்கை அடக்க நினைத்த கண்ண பெருமான் தேர் நிழல் மீது தனது திருவடியை வைத்து அழுத்தினார்.மன்னனின் தேர் கீழே அழுந்தியது. அத்துடன் அவனது ஆணவமும் அழிந்தது.

இதனால் இத்தலம் தேரழுந்தூர் என பெயர் பெற்றது. மேலும் இத்திருத்தலம் கவிச்சக்கரவர்த்தி கம்பன் பிறந்த ஊராகும். திருமங்கை ஆழ்வாரால் 45 பாசுரங்களால் மங்களசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் 10-வது திவ்ய தேசமாகும். இக்கோவிலில் மூலவர் ஸ்ரீதேவாதிராஜன் என்ற பெயரிலும், உற்சவர் ஆமருவியப்பன் என்ற பெயரிலும் அருள்பாலிக்கின்றனர். புகழ் வாய்ந்த இவ்வாலயத்தின் வைகாசி பிரம்மோத்ஸவப் பெரு விழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தினம் தோறும் பெருமாள் வீதிஉலா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. செங்கமலவல்லி உடனாகிய ஆமருவியப்பன் பெருமாள் தேரில் எழுந்தருள செய்யப்பட்டு திருமஞ்சனம் நடைபெற்றது. தொடர்ந்து தீபாராதனை செய்யப்பட்டு தேரோட்டம் துவங்கியது. பக்தர்கள் கோவிந்தா, ஆமருவியப்பா என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரத வீதிகளில் தேர் வலம் வந்து நிலையை அடைந்தது. ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story