சேலத்தில் ஆட்டோ டிரைவர் கொலை - போலீசார் விசாரணை
பைல் படம்
சேலம் அஸ்தம்பட்டி மணக்காடு இட்டேரி ரோட்டை சேர்ந்தவர் நிசார் பாட்ஷா (வயது 45). ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணமாகி ஹசினா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இதற்கிடையே நிசார் பாட்ஷா எருமாபாளையத்தில் மனைவிக்கு தெரியாமல் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து திருப்பூரை சேர்ந்த பிரியா என்ற பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்தார்.
அங்கு கடந்த 12-ந் தேதி நிஷார் பாட்ஷா கொலை செய்யப்பட்டு அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து கிச்சிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த கொலை தொடர்பாக பிரியாவை போலீசார் பல்வேறு இடங்களில் தேடி வருகின்றனர். போலீசார் விசாரணையில், நிஷார் பாட்ஷாவை பிரியா அடித்துக்கொலை செய்துவிட்டு பின்னர் உடலை சமையல் அறைக்குள் இழுத்து சென்று போட்டுள்ளார். மேலும் அங்கு சிதறிக்கிடந்த ரத்தத்தை கழுவிய பிரியா துர்நாற்றம் எதுவும் வீசக்கூடாது என்பதற்காக முகத்திற்கு போடும் பவுடரை அறை முழுவதும் தூவியது தெரியவந்தது. இந்த கொலை தொடர்பாக நிஷார் பாட்சாவின் நண்பர்கள், உறவினர்கள் உள்பட பலரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.