சதுரகிரியில் ஜூன் 4 முதல் பக்தர்கள் மலையேறி செல்ல அனுமதி

சதுரகிரியில் ஜூன் 4 முதல் பக்தர்கள் மலையேறி செல்ல அனுமதி

சதுரகிரி மலை

சதுரகிரியில் பிரதோஷம், அமாவாசை வழிபாடு செய்ய ஜூன் 4 முதல் பக்தர்கள் மலையேறி செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது.கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ள கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி ஆகிய நாட்களில் மட்டுமே பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய வனத்துறையினர் அனுமதி அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் வைகாசிமாத பிரதோஷம், அமாவாசை வழிபாட்டை முன்னிட்டு ஜூன் 4 முதல் ஜூன் 7 வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.கோயிலில் ஜூன் 4ல் பிரதோஷம், ஜூன் 6ல் அமாவாசை வழிபாடு நடைபெறுகிறது.

இதனை முன்னிட்டு ஜூன் 4 முதல் 7 வரை நான்கு நாட்கள் தினமும் காலை 7:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள். அனுமதி நாட்களில் எதிர்பாராத விதமாக திடீரென மழை பெய்தாலும், ஆற்றுப்பகுதியில் நீர்வரத்து அதிகரித்தாலும் பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் பக்தர்கள் தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் எளிதில் தீ பற்றக்கூடிய பொருட்களை வனப்பகுதிக்குள் கொண்டு சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பக்தர்கள் இரவில் கோவில் வளாகப் பகுதியில் தங்குவதற்கு அனுமதி கிடையாது எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பிரதோஷம் மற்றும் அமாவாசை வழிபாட்டிருக்கான ஏற்பாடுகளை சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Tags

Next Story