சென்னைக்கு புதிய பேருந்து - அமைச்சர்கள் துவக்கி வைப்பு

சென்னைக்கு புதிய பேருந்து - அமைச்சர்கள்  துவக்கி வைப்பு

பேருந்து சேவை துவக்கம் 

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தாராபுரத்தில் இருந்து சென்னை செல்லும் புதிய பேருந்து சேவையை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் தாராபுரம் புதிய பஸ் நிலையத்தில் புதிய வழித்தடங்களில் பஸ் சேவை, புதிய பஸ்கள் இயக்கம் மற்றும் நகர பஸ் வழித்தடம் நீட்டிப்பு செய்து தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

அப்போது பேசிய அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தாராபுரம் நகராட்சி பஸ் நிலையத்தில் இருந்து தினசரி மாலை 7 மணிக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ் புறப்பட்டு அடுத்த நாள் காலை 5.30 மணிக்கு சென்னை சென்றடையும் அதேபோல் சென்னை கிளம்பாக்கத்தில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.30 மணிக்கு தாராபுரத்திற்கும் இந்த புதிய பஸ் வந்தடையும். புதிய பஸ் வசதிகள் இந்த பகுதியில் இருக்கும் பொது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் தாராபுரம் பகுதியில் உள்ள உடையார்பாளையத்திற்கு கூடுதலாக இரண்டு நகர பஸ்கள் இயக்கப்படுகிறது. கோவை, திருச்செந்தூருக்கு இரண்டு புதிய பஸ், ஊட்டியில் இருந்து கூடலூர் திருச்சிக்கு புதிய பஸ்கலும், அந்தியூரில் இருந்து சென்னைக்கு ஒரு புதிய பஸ்சும் இயக்கப்பட இருக்கிறது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் புதிய வழித்தடங்களும் புதிய பஸ்கள் இருக்க உத்தரவிட்ட முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு பொதுமக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்றார்.

இந்நிகழ்ச்சியில் தாராபுரம் ஆர்டிஓ செந்தில் அரசன், திருப்பூர் மாநகராட்சி 4வது மண்டல தலைவர் பத்மநாதன், வட்டாட்சியர் கோவிந்தசாமி, நகராட்சித் தலைவர் பாப்பு கண்ணன், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் செந்தில்குமார், நகர செயலாளர் முருகானந்தம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாளர் செல்வகுமார், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் கமலக்கண்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகரன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story