எடப்பாடியார் கைகாட்டுபவர் தான் பிரதமர் : முன்னாள் அமைச்சர்

எடப்பாடியார் கைகாட்டுபவர் தான் பிரதமர் : முன்னாள் அமைச்சர்

கூட்டத்தில் பேசும் முன்னாள் அமைச்சர்


தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி எஸ்.என்.வி திருமண மண்டபத்தில், பேராவூரணி தெற்கு ஒன்றியம், பேரூர் கழகம் சார்பில், பூத் கமிட்டி, மகளிர் அணி, இளைஞர், இளம் பெண்கள் பாசறை அமைப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

கூட்டத்திற்கு, பேராவூரணி தெற்கு ஒன்றியச் செயலாளர் கோவி.இளங்கோ தலைமை வகித்தார். தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் சி.வி.சேகர், அதிமுக மாநில விவசாய அணி இணைச் செயலாளர் மா.கோவிந்தராசு, அதிமுக மாவட்ட அவைத்தலைவர் எஸ்.வி.திருஞானசம்பந்தம் முன்னிலை வகித்தனர். இதில், முன்னாள் அமைச்சர் வளர்மதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், "கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி செய்வதாக அறிவித்து விட்டு, குறிப்பிட்ட பேருக்கு மட்டுமே தள்ளுபடி செய்தனர். தி.மு.க ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்றவர்கள், இப்போது கையெழுத்து இயக்கம் நடத்துவதாக நாடகமாடிக் கொண்டுள்ளனர். நீட் தேர்வைக் கொண்டு வந்ததே திமுக, காங்கிரஸ் கூட்டணி தான்.

பொய்யை மூலதனமாக கொண்டு, மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடித்தனர். எனவே, நாம் ஒருங்கிணைந்து செயல்பட்டு, வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும். எடப்பாடியார் கை காட்டுபவர் தான் பிரதமராக வர வேண்டும்" இவ்வாறு பேசினார். தலைமைக் கழக பேச்சாளர் திலீபன், முன்னாள் கயிறு வாரியத் தலைவர் நாடாகாடு நீலகண்டன், பேராவூரணி ஒன்றியக்குழு தலைவர் சசிகலா ரவிசங்கர், சேதுபாவாசத்திரம் தெற்கு ஒன்றியச் செயலாளர் கே.எஸ்.அருணாச்சலம், நகரச் செயலாளர் எம்.எஸ்.நீலகண்டன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். நிறைவாக, எம்ஜிஆர் இளைஞர் அணி ராமநாதன் நன்றி கூறினார். இதில், அதிமுக மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story