பெரம்பலூர் மாவட்டத்தில், 1,72,584பேருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு

மாவட்ட ஆட்சியர்
தமிழக அரசு தமிழர் திருநாளான தைப்பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக, பொது விநியோகத்திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தகுதியுள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலங்கைத்தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரையுடன் முழுக் கரும்பு மற்றும் ரூ.1000 ரொக்கத்தொகை அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசுத் தொகுப்பினை சிரமமின்றி தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்கள் பெற எதுவாக ஒவ்வொரு நியாயவிலைக் கடைகளிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டு முன்னதாக இல்லங்களுக்கு சென்று டோக்கன் வழங்கப்படும். அதன்படி 'பெரம்பலூர் மாவட்டத்தில் ஜனவரி 9ம் தேதி வரை டோக்கன் விநியோகம் செய்யப்படும் மேலும் ஜனவரி 10ம் தேதி முதல் 14. ம் தேதி வரையில் எல்லா நாட்களிலும் டோக்கன்படி பொங்கல் பரிசுத் தொகுப்பு நியாயவிலைக் கடைகளில் விநியோகம் செய்யப்படும்.
மேலும் நடைமுறையிலுள்ள 1,72,502 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் 82 குடும்பங்கள் என மொத்தம் 1,72,584 குடும்பங்களுக்கு 282 நியாயவிலைக் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்.
குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள் எவரேனும் ஒருவர் வந்தாலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி குறித்த புகார்கள் ஏதும் இருப்பின் அதனை சம்பந்தப்பட்ட உணவுப் பொருள் வழங்கல் தனி வட்டாட்சியர்கள், வட்ட வழங்கல் அலுவலர்களிடம் தெரிவிக்கலாம்.
மேலும், மாவட்ட அளவில் மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்.04328 296140 - இல் தொடர்பு கொண்டு புகாரினை தெரிவிக்கலாம். மாநில அளவில் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1967 மற்றும் 1800-425-5901 ஆகிய எண்களிலும் மற்றும் ஆணையாளர் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, சென்னை அலுவலக கட்டுப்பாட்டு அறை எண்.044-28592828 என்ற தொலைபேசி எண்ணிலும் புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கற்பகம் தெரிவித்துள்ளார்.