கழுமங்குடா அரசுப்பள்ளி பள்ளி மாணவர்கள் சாதனை

தஞ்சாவூர் மாவட்ட அளவில் நடந்த பல்திறன் போட்டிகளில் வெற்றி பெற்று கழுமங்குடா அரசுப் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.

தமிழ்நாடு அரசு, பள்ளிக் கல்வித்துறை சார்பில் பண்பாடு மற்றும் விளையாட்டு வார விழா ஒவ்வொரு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் நடைபெற்றது. ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களின் தனித்திறன்களை வளர்த்தெடுக்கும் வகையில் முதலில் பள்ளி அளவிலும், படிப்படியாக ஒன்றிய, மாவட்ட அளவில் திறன் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.

பள்ளி மற்றும் ஒன்றிய அளவில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள், மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெறுகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், கழுமங்குடா ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியைச் சேர்ந்த 8 மாணவர்கள் ஒன்றிய அளவில் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் ஒன்றிய அளவில் முதலிடம் பெற்ற ஆறு மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டனர்.

தஞ்சை மாவட்ட அளவில் ஒன்று முதல் ஐந்து வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற்ற திறன் போட்டிகளில் கழுமங்குடா ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியின் மூன்று மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். கதை சொல்லுதல் போட்டியில் நான்காம் வகுப்பு படிக்கும் மீ.முகம்மது ஹமீஸ் முதல் இடத்தையும், கண்காட்சி (அறிவியல் செயல்திட்டம்) போட்டியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஆ.ஷ.தனுஷ்யா இரண்டாவது இடத்தையும், பாட்டுப் போட்டியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் ச.சபீலாபானு மூன்றாம் இடத்தையும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

மாவட்ட அளவில் கலைத்திறன் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள மாணவர்களை வட்டாரக் கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர் கி.ஷஜிதா, ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு தலைவி மு.கீர்த்திகா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரெ.நந்தினி உள்ளிட்ட பொறுப்பாளர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story