ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்
X
தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் கைது
சென்னையில் அண்ணா பல்கலைக்கழகம் என்ஜினீயரிங் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் சென்னை கோரட்டூர்புரத்தை ஞானசேகர் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அ.தி.மு.க சார்பில் தமிழக முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தின் போது செல்போனில் பேசிய குற்றவாளி சார் என்று குறிப்பிட்டதை மையப்படுத்தி அ.தி.மு.க.வினர் யார் அந்த சார் என்ற வாசகத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மாணவி பலாத்கார சம்பவத்தை கண்டித்தும், திமுக அரசை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். அதன்படி ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் வீரப்பன் சத்திரத்திலும், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் பவானி அந்தியூர் ரோடு பகுதியிலும், ஈரோடு புறம் நகர் மேற்கு மாவட்டம் சார்பில் சத்தியமங்கலம் பஸ் நிலையம் அருகிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் போலீசார் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்து இருந்தனர் எனினும் தடை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் முன்னெச்சரிக்கையாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதன்படி இன்று காலை ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் பகுதியில் முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளருமான கே.வி. ராமலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க.வினர் 500-க்கும் மேற்பட்டோர் யார் அந்த சார்? என்ற வாசகங்கள் அடங்கிய பதாகையை கையில் ஏந்தி தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டனர். தி.மு.க அரசுக்கு எதிராக கோஷங்களும் எழுப்பினர். இதை எடுத்து போலீசார் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினரை கைது செய்து வேனில் ஏற்றி அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், துணை மேயர் கே.சி.பழனிசாமி, பகுதி செயலாளர்கள் பெரியார் நகர் மனோகரன், கேசவமூர்த்தி, கோவிந்தசாமி, ஜெய பாலாஜி, மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் தங்கமுத்து, ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளர் வீரக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் ஈகிள் சதீஷ்குமார், மாநகர எம்.ஜி.யார் மன்ற துணைச் தலைவர் பொன் சேர்மன், உள்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சர் மன செங்கோட்டையன் எம் எல் ஏ தலைமையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 300 -க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் பவானி அந்தியூர் ரோடு பகுதியில் ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பாக மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கேசி கருப்பணன் எம்எல்ஏ தலைமையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர். ஜெயக்குமார் எம் எல் ஏ முன்னிலை வகித்தார். இவ்வாறாக மாவட்டம் முழுவதும் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
Next Story