அதிகாரிகள் முறைகேடு : துணைத் தலைவர்-கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

அதிகாரிகள் முறைகேடு : துணைத் தலைவர்-கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

மனு அளிக்க வந்த துணைத் தலைவர் மற்றும் கவுன்சிலர்கள்

கருமத்தம்பட்டி நகராட்சியில் துணை தலைவர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முறைகேடுகளில் ஈடுபடும் அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியத்தில் 27 வார்டுகள் கொண்ட கருமத்தம்பட்டி நகராட்சி உள்ளது.இந்த நகராட்சியில் திமுகவைச் சேர்ந்த நித்யா மனோகரன் என்பவர் தலைவராகவும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த யுவராஜ் என்பவர் துணைத் தலைவராகவும் இருந்து வருகின்றனர். நகராட்சி ஆணையராக இருந்து வந்த முத்துசாமி என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணி மாறுதல் பெற்று சென்றுவிட்ட நிலையில் மதுக்கரை நகராட்சி ஆணையர் பிச்சைமணி என்பவர் கருமத்தம்பட்டி நகராட்சி ஆணையராக கூடுதல் பொறுப்பு வகுத்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று நகராட்சி துணைத் தலைவர் யுவராஜ் தலைமையில் நடைபெற்ற நகராட்சி கூட்டத்தில் 11 நகர் மன்ற கவுன்சிலர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் நகராட்சி ஆணையர் பிச்சைமணி உள்ளிட்ட அதிகாரிகள் தொடர் முறைகேடுகளில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து கருமத்தம்பட்டி நகராட்சி துணைத் தலைவர் யுவராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த 2 ஆண்டுகளாக கருமத்தம்பட்டி நகராட்சியில் நிர்வாக சீர்கேடுகள் அதிகரித்துள்ளது எனவும் பணிகள் எதுவும் முறையாக நடைபெறாததால் மக்களிடையே மன வருத்தத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் வருவாய் பணிகளுக்காக நகராட்சியை நாடும் பொதுமக்கள் தினமும் அலைக்கழிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் கவுன்சிலர்களுக்கு உரிய மரியாதை கொடுப்பதில்லை என தெரிவித்தார்.இந்த நிலையில் நகராட்சி கூட்டத்தில் நிர்வாக சீர்கேடுகளுக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறியவர் அதிகாரிகளின் மெத்தனப் போக்கான நடவடிக்கையால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு கருமத்தம்பட்டி நகராட்சி பகுதிகளில் வாக்கு வங்கி குறைந்துள்ளது எனவும் முறைகேடுகளில் ஈடுபடும் அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய வேண்டுமெனவும் தீர்மானத்தில் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.துறை ரீதியிலான அதிகாரிகளை சந்தித்து புகார் அளிக்க உள்ளோம் எனவும் தெரிவித்தார்.

இது குறித்து கருமத்தம்பட்டி நகராட்சி ஆணையர் பிச்சைமணியிடம் கேட்டபோது நகர்மன்ற கூட்டத்தைக் கூட்டுவதற்கு தலைவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்றவர் சட்ட விதிகளின்படி நகர்மன்ற கூட்டத்தை கூட்ட துணை தலைவருக்கு அதிகாரம் இல்லை என்றார்.இந்த தீர்மானத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லத்தக்கது அல்ல எனவும் தெரிவித்தார்.

Tags

Next Story