நாடாளுமன்ற தேர்தல் தோல்வி: அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி ஆலோசனை

எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை
நாடு முழுவதும் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க., புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ. ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. இதில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர்.
சில தொகுதிகளில் இக்கூட்டணி வேட்பாளர்கள் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டனர். இதற்கிடையில் சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் நேற்று காலை சேலம் மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி பேசினார். அமைப்பு செயலாளர் செம்மலை, மாவட்ட செயலாளர்கள் ஜி.வெங்கடாஜலம் (மாநகர்), இளங்கோவன் (புறநகர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அப்போது மாவட்டத்தில் எந்ததெந்த சட்டசபை தொகுதிகளில் வாக்குகள் குறைந்துள்ளது என்றும், அதற்கான காரணம் குறித்தும் நிர்வாகிகளிடம் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார். கடந்த தேர்தலில் சட்டசபை தொகுதிகளில் பெற்ற வாக்குகளுடன் ஒப்பிட்டு பார்த்து விசாரித்தார்.
பூத் வாரியாகவும் பெற்ற வாக்குகளை ஒப்பிட்டு பார்த்தார். வாக்குகள் குறைந்ததற்கான காரணம் குறித்து நிர்வாகிகள் தங்களது கருத்துகளை அவரிடம் தெரிவித்தனர். அடுத்து மேற்கொள்ள வேண்டிய கட்சியின் வளர்ச்சி குறித்தும் விவாதிக்கப்பட்டது. ஒற்றுமையுடன் ஒருங்கிணைந்து கட்சிக்கு பாடுபட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளிடம் கேட்டு கொண்டார்.
