ஊட்டியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வலுக்கிறது எதிர்ப்பு!

ஊட்டியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வலுக்கிறது எதிர்ப்பு!

செய்தியாளர் சந்திப்பு 

ஊட்டி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தும் நகராட்சியின் தீர்மானத்தை கைவிடாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் ஊட்டியில் 36 வார்டுகள் உள்ளன. 1987 முதல் சிறப்பு நிலை நகராட்சியாக இயங்கி வரும் ஊட்டியின் மொத்த பரப்பளவு 30 சதுர கி.மீ.,. 2010-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 88,430 பேர் இங்கு வசித்தனர். தற்போது ஊட்டி நகராட்சியில் 1.75 கோடி மக்கள் தொகை உள்ளது. 3500 வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் உள்ளன. சர்வதேச சுற்றுலாத்தலமான நீலகிரிக்கு ஆண்டுதோறும் சுமார் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

ஊட்டி நகராட்சி 1866-ம் ஆண்டு நகராட்சியாக உருவானது என்பதால், ஊட்டி நகராட்சியில் எல்லையை விரிவாக்கம் செய்து, நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தினால் அதிக அளவில் அரசு திட்டங்கள், நிதி செயல்பாட்டுக்கு வருவதன் மூலம் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரமும், பொருளாதாரமும் உயரும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கைக்கு ஏற்ப ஊட்டி நகராட்சியை, மாநகராட்சியாக தரம் உயர்த்த திட்டமிடப்பட்டது. இந்நிலையில், கடந்த 5-ம் தேதி நகராட்சி தலைவர் வாணீஸ்வரி, ஆணையாளர் ஏகராஜ் தலைமையில் நடந்த அவசர கூட்டத்தில் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டது.

ஊட்டி நகராட்சியுடன் அருகில் உள்ள கேத்தி மற்றும் இத்தலார் பேரூராட்சி, உல்லத்தி, நஞ்சநாடு, தொட்டபெட்டா ஆகிய ஊராட்சி பகுதிகளை ஊட்டி நகராட்சியுடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கேத்தி உட்பட அனைத்து கிராம மக்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் கிராம மக்கள் ஆலோசனை கூட்டம் நடத்தி, ஊட்டி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றினர். இதுகுறித்து அந்த மக்கள் நிருபர்களிடம் கூறியதாவது; ஊட்டி நகராட்சியுடன் சுற்றுவட்டார கிராமங்களை இணைப்பது தொடர்பாக கிராம மக்களுடன் எந்தவித கருத்து கேட்காமல் பரிந்துரை செய்திருப்பது கண்டனத்துக்குரியது. ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் எந்த பணிகள் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் சுற்றுவட்ட கிராம மக்களின் அனுமதி இல்லாமல் இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றி இருக்கக் கூடாது. ஊட்டி நகராட்சியை மாநகராட்சியாக மாற்றும்போது வரி இரட்டிப்பாகிறது.

பொதுவாக மாநகராட்சியாக மாற்ற வேண்டுமென்றால் மக்கள் தொகை அதிக அளவில் இருக்க வேண்டும். அதிக அளவில் தொழிற்சாலைகள் இருக்க வேண்டும். அதற்கு ஏற்ப வணிகமும் நடைபெற வேண்டும். அதுபோல் எந்த ஒரு விஷயமும் இங்கு இல்லை. மேலும் வனவிலங்குகள் அதிகம் வசிக்கும் பகுதியாக உள்ளது. ஏற்கனவே ஆதிவாசி பட்டியலில் இருந்து பிற்படுத்தப்பட்ட பிரிவுக்கு மாற்றப்பட்ட சுமார் 400 கிராமங்கள் உள்ளது. மாநகராட்சியாக மாற்றுவதன் மூலம் இவர்கள் கடைபிடிக்கும் கலாச்சாரம் பாதிக்கப்படும். விவசாயம் பாதிக்கப்பட்டு விவசாய மனைகள் ரியல் எஸ்டேட்டுக்கு மாற வாய்ப்பு உள்ளது. மாநகராட்சியாக மாற்றப்படும் பட்சத்தில் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் அதிகரிக்கும், ஆனால் இங்குள்ள விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். 100 நாள் வேலைத்திட்டம் பாதிக்கப்படும். கிராம பஞ்சாயத்திற்கு வழங்கப்படும் இலவச குடிநீர் கிடைக்காது. இதையும் மீறி ஊட்டி நகராட்சியை மாநகராட்சியாக மாற்றி சுற்றுவட்டார கிராமங்களை இணைத்தால் கிராம மக்கள் மற்றும் நாக்கு பட்டா நல சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story