அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்

குமாரபாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அனைத்து சமூக காளியம்மன் கோவிலில் மறு பூச்சாட்டு விழா, கொடியேற்றம், நடந்த நிலையில், பிப். 27ல் அம்மனுக்கு தீர்த்தக்குட புனித நீர் ஊற்றுதல், தேர் கலசம் வைத்தல், காவேரி ஆற்றுக்கு சென்று சக்தி அழைத்து வருதல், பிப். 28ல் மகா குண்டம், பூ மிதித்தல், பொங்கல் விழா, அலங்கார ஆராதனை, பிப். 29ல் அம்மன் திருக்கல்யாணம், தேர்த்திருவிழா, வண்டிவேடிக்கை, மார்ச். 1ல் தேர் நிலை அடைதல், நாதஸ்வர இன்னிசையுடன் அம்மன் திருவீதி உலா, மார்ச். 2ல் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா, மார்ச். 3ல் அம்மனுக்கு ஊஞ்சல் விழா ஆகியன நடைபெறவுள்ளன.

தக்கார் வடிவுக்கரசி, செயல் அலுவலர் குணசேகரன் மற்றும் விழாக்குழுவினர் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். நேற்று குமாரபாளையம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள 50க்கும் மேற்பட்ட அனைத்து மாரியம்மன் கோவில்களில் பூச்சாட்டுதல் மற்றும் கம்பம் நடுதல் வைபவம் நடந்தது. குமாரபாளையம் தம்மண்ணன் வீதி 24 மனை மாரியம்மன் கோவிலில் நேற்று பூச்சாட்டுவிழாவையொட்டி, அம்மன் பவானி செல்லியாண்டி அம்மன் அலங்காரத்தில் அருள்பாலித்தார். கோவில் வளாகம் முழுதும் மலர்கள், பழங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

வாசுகி நகர் சக்தி மாரியம்மன் கோவிலில், அம்மன் வாராஹி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். தேவாங்கர் மாரியம்மன், பெரிய மாரியம்மன், சமயபுரம் மாரியம்மன் கோவில்கள் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் திருவிழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story