திருக்களாச்சேரி சீதளாதேவி ஆலய தேரோட்டம்

திருக்களாச்சேரி சீதளாதேவி ஆலய தேரோட்டம்

நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர் 

தரங்கம்பாடி அருகே திருக்களாச்சேரியில் உள்ள ஸ்ரீமத் சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா மற்றும் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தி தேரை வடம் பிடித்து இழுத்து வழிபாடு செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்களாச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீமத் சீதளா தேவி மாரியம்மன் கோவில் வைகாசி பிற்மோற்சவ தீமிதி திருவிழா மற்றும் தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. வைகாசி பிற்மோற்சவ திருவிழா முன்னிட்டு கடந்த மாதம் 26ஆம் தேதி புஷ்பா அபிஷேகத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து இன்று தீமிதி மற்றும் தேரோட்டம் நடைபெற்றது.

தீமிதி திருவிழாவை முன்னிட்டு கோவில் அருகே அமைக்கப்பட்ட தீக்குண்டம் எதிரில் அம்மன் எழுந்தருளி காட்சியளிக்க குளக்கரையில் இருந்து சக்தி கரகம் புறப்பட்டு மேல வாத்தியங்கள் முழங்க விரதமிருந்த ஏராளமான பக்தர்கள் மஞ்சள் உடை உடுத்தியும் காவடி ஏந்தியும் 16 அடி அலகு காவடி குத்தியும் சக்தி கரகத்துடன் ஊர்வலமாக வந்து கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

பின்னர் அலங்கரிக்கப்பட்ட அம்மன் தேரில் எழுந்தருளி காட்சி அளிக்க தேர் வீதி உலாவும் நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர். மேலும் வைகாசி பிற்மோற்சவத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

Tags

Next Story