திருச்சுழி அருகே தறிகெட்டு ஓடிய ஜீப் மோதி இருவர் பலி

திருச்சுழி அருகே தறிகெட்டு ஓடிய ஜீப் மோதி இருவர் பலி

மோதிய ஜீப்

திருச்சுழி அருகே தறிகெட்டு ஓடிய ஜீப் டீ கடையில் நின்று கொண்டிருந்தவர்கள் மோதியதில் இருவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே மண்டபசாலை பேருந்து நிறுத்தம் எதிரே உள்ள டீக்கடையின் முன்பு மாலை வேளையில் பொதுமக்கள் டீ குடித்துக் கொண்டிருந்ததாக கூறப் படுகிறது. அப்போது, மதுரை - வாலிநோக்கம் நெடுஞ்சாலையில் சாயல்குடியில்,

இருந்து மதுரை நோக்கி சென்ற பாஜக கொடி கட்டிய மகேந்திரா ஜீப் ஒன்று அதிவேகமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்ததை பார்த்து பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடியுள்ளனர். அப்போது ஜீப் சாலையோரம் டீ கடையில் நின்றிருந்தவர்கள் மீது மோதியதில் இருவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் ஒருவர் படுகாயம் அடைந்து அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பொதுமக்கள் அனுப்பி வைத்த நிலையில் அவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

அங்கும் இங்கும் தறிகெட்டு ஓடிய ஜீப் கடைசியாக மின்கம்பத்தில் மோதி நின்றது. இதனால் மின் கம்பம் முறிந்து மின்சார வயர் அறுந்து விழுந்தது. உடனடியாக மின்சாரம் தடைபட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ம.ரெட்டியபட்டி காவல் நிலைய போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மதுரை - வாலிநோக்கம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதனால் மதுரை - வாலிநோக்கம் மற்றும் ராமநாதபுரம், கமுதி, சாயல்குடி உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் வாகனங்கள் நெடுஞ்சாலையில் அணிவகுத்து நின்றன. சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தப்பி ஓடிவர்களை உடனடியாக கைது செய்வோம் என உறுதி அளித்ததை தொடர்ந்து சமாதானமாகி சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் போலீசார் விசாரணையில் விபத்தில் உயிரிழந்தவர்கள் செங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டு வியாபாரி காளிமுத்து (வயது 54) மற்றும் விவசாயிகளான விஜயராமன் (வயது 53) மற்றும் மூக்கையா (வயது - 50) ஆகியோர் என்பது தெரிய வந்தது.

ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தறி கெட்டு ஓடி டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்த 3 நபர்களை காவு வாங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story