நாகர்கோவிலில் தமிழ்க்கனவு நிகழ்ச்சி: சைலேந்திரபாபு பங்கேற்பு
தமிழ் கனவு நிகழ்ச்சி
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலையரங்கில் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டு தொடர்ந்து சிறப்பாக நடைபெற்றுவரும் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காவல்துறை முன்னாள் தலைமை இயக்குநர் முனைவர்.செ.சைலேந்திர பாபு, கலந்து கொண்டு மாணவ, மாணவியர்களிடையே பேசுகையில், நமது தமிழ் மரபின் வளமையையும் பண்பாட்டின் செழுமையையும் சமூகச் சமத்துவத்தையும் பொருளாதார மேம்பாட்டுக்கான வாய்ப்புகளையும் இளம் தலைமுறையினரிடையே குறிப்பாகக் கல்லூரி மாணவர்களிடையே கொண்டு செல்வதற்காக தமிழ்நாடு அரசு இந்தப் பரப்புரைத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 200 கல்லூரிகளில் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ பரப்புரைத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. நிகழ்வு நடக்கும் கல்லூரிகளுக்கு அருகிலுள்ள கல்லூரிகளிலிருந்தும் மாணவர்கள் பங்கு பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் குறைந்தபட்சம் 1.5 லட்சம் மாணவர்களைச் சென்றடைவதே திட்டத்தின் இலக்காகும் என பேசினார்.
தொடர்ந்து ‘தமிழ்ப் பெருமிதம்’ சிற்றேட்டிலுள்ள துணுக்குகளை வாசித்துச் சிறப்பாக விளக்கம் அளித்த மாணவர்களைப் பாரட்டி பெருமிதச் செல்வி/பெருமிதச் செல்வன் எனப் பட்டம் சூட்டிச் சான்றிதழும் பரிசும் நிகழ்வின் இறுதியில் வழங்கப்பட்டது. சொற்பொழிவாளர்களிடம் தரமான கேள்விகளை எழுப்பிய மாணவர்களைப் பாராட்டி கேள்வியின் நாயகி / கேள்வியின் நாயகன் எனப் பட்டம் சூட்டிச் சான்றிதழும் பரிசும் வழங்கப்பட்டது. நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி முதல்வர் முனைவர் ஹென்றி ராஜ், கல்லூரி மாணவ மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.