கடைசி நாளில் அதிர்ச்சி கொடுத்த தேர்தல் ஆணையம் - கலங்கி நிற்கும் வைகோ

கடைசி நாளில் அதிர்ச்சி கொடுத்த தேர்தல் ஆணையம் - கலங்கி நிற்கும் வைகோ

வைகோ, துரை வைகோ

“சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிடும் பட்சத்தில் ஒரே சின்னம் ஒதுக்கப்படும்”

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் வைகோவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மதிமுக கட்சிக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் யார் போட்டியிடுவார் என்ற கேள்வி எழுந்த நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. கடந்த தேர்தல்களில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக கட்சி இம்முறை பம்பரம் சின்னம் வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் கங்கப்பூர்வாலா மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் செவ்வாய் கிழமை விசாரணைக்கு வந்தது. அதில், வைகோ தரப்பில் வைத்த கோரிக்கையை ஏற்று கட்சி நிர்வாகிகளின் பெயர்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்த தேர்தல் ஆணையம் பம்பரம் சின்னம் ஒதுக்கீடு செய்யவில்லை என்றும், வேட்பு மனு தாக்கலுக்கு புதன்கிழமை கடைசி நாள் என்பதால் தங்கள் கோரிக்கையை பரிசீலிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம் தரப்பு வழக்கறிஞர், “சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிடும் பட்சத்தில் ஒரே சின்னம் ஒதுக்கப்படும். மதிமுகவின் கோரிக்கை மீது இன்று முடிவெடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

மேலும், 14 ஆண்டுகளுக்கு முன்பு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட நிலையில் மதிமுகவுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட தொகுதியின் தேர்தல் அதிகாரி தான் முடிவு எடுப்பார் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பம்பரம் சின்னம் பொது சின்னமாகவோ, ஒதுக்கீட்டு சின்னமாகவோ வகைப்படுத்தப்படவில்லை. மதிமுக அளித்த விண்ணப்பத்தின் மீது புதன்கிழமை காலைக்குள் முடிவெடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பம்பரம் சின்னம் தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அளித்த விண்ணப்பத்தின் மீது இன்று காலை 9 மணிக்குள் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. அதன்படி, மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது. ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிடுவதால் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என மதிமுக வழக்கறிஞருக்கு மின்னஞ்சல் மூலம் தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.

மேலும் ஒரு கட்சிக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்டு இருந்த சின்னத்தை ஒரு தொகுதிக்காக பொது சின்னமாக அறிவிப்பது என்பது ஒரு தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மதிமுக முதன்மை செயலாளர் துறை வைகோ பம்பரம் சின்னம் தொடர்பாக நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வோம் என்றும், பம்பரம் சின்னம் இல்லை என்றால் மாற்று ஏற்பாடு வைத்துள்ளோம் எனவும் தெரிவித்தார்.

Tags

Next Story