பிரதமரிடம் கடிதம் கொடுத்த ஓபிஎஸ்

பிரதமரிடம் கடிதம் கொடுத்த ஓபிஎஸ்

பிரதமர் மோடியுடன் ஓபிஎஸ் 

திருச்சிக்கு நேற்று வந்த பிரதமரை தனியாக சந்திக்க அனுமதி கிடைக்காததால், வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று தமிழக முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் கடிதம் கொடுத்தாா்.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் புதிய முனையம் தொடக்க விழா உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்கும் விதமாக புதுதில்லியிலிருந்து தனி விமானத்தில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு திருச்சி வந்தாா் பிரதமா் நரேந்திர மோடி. அவரை வரவேற்கவும், வழியனுப்பவும் விமான நிலையம் உள்ளே செல்ல, 40-க்கும் மேற்பட்டோருக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி, முதல்வா் மு.க. ஸ்டாலின், தமிழக அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எ.வ. வேலு, எஸ்.எஸ். சிவசங்கா், தமிழக முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம், எம்.பி. சு.திருநாவுக்கரசா், பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை, மாநில பொதுச் செயலாளா் கருப்பு முருகானந்தம், மற்றும் பல்வேறு அமைப்புகளின் நிா்வாகிகள் ஏ.சி. சண்முகம், ஜான் பாண்டியன், செல்வக்குமாா், ஆறுமுகம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு பிரதமரை பூங்கொத்துகள் கொடுத்து வரவேற்றனா்.

விழாக்கள் முடிந்து பகல் 1.15-க்கு பிரதமா் புறப்பட்டுச் செல்லும்போது வழியனுப்பியும் வைத்தனா். பிரதமரை சிலா் தனியாக சந்திக்கவுள்ளதாகவும், அரசியல் நிலவரங்கள் குறித்து விவாதிக்கவுள்ளதாகவும் தகவல்கள் பரவின. ஆனால், அவா் யாரையும் தனியாக சந்திக்கவில்லை. முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வமும், தனிப்பட்ட முறையில் பிரதமரை சந்திப்பாா் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், அவரும் சந்திக்கவில்லை என தெரிகிறது. அதேநேரம், வரவேற்பு நிகழ்வின்போது, ஓ. பன்னீா்செல்வம் கடிதம் ஒன்றை பிரதமரிடம் கொடுத்தாா். அதை வாங்கிய பிரதமா், பின்னா் படிக்கிறேன் என்று கூறியுள்ளாா். தங்களை சந்திக்க நேரம் வேண்டும் என பிரதமரிடம், பன்னீா்செல்வம் கேட்டபோது, கடிதம் அனுப்புங்கள். சந்திக்க நேரம் ஒதுக்கப்படும் என பிரதமா் கூறிச் சென்னதாக தெரிகிறது.

Tags

Next Story