ஷாட்ஸ்

சென்னை கார் பந்தயம்; முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு நடிகர் அஜித் நன்றி!!

சென்னையில் இரவு நேர கார் பந்தயம் நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதிக்கு நடிகர் அஜித் குமார் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து நடிகரும், கார் ரேசருமான அஜித் குமார் கூறியிருப்பதாவது, சென்னையில் முதல்முறையாக ஸ்ட்ரீட் ரேசிங் நடைபெற்றது. அதுவும் இரவுநேர போட்டியாக நடந்தது. இதனை சாத்தியப்படுத்திய முதலமைச்சர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு அரசுக்கு நன்றி. இந்தியாவில் மோட்டார் ஸ்ட்போர்ஸ்-க்கு மிகப்பெரிய ஊக்கமாக அது இருந்தது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மோட்டார் ஸ்போர்ட்ஸ்க்கு நிறைய நல்ல விஷயங்களை செய்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெண்களுக்கு மாதம் ரூ.2,500; கர்ப்பிணிகளுக்கு ரூ. 21,000 வழங்கப்படும்: டெல்லி தேர்தலில் பாஜக வாக்குறுதி!!

டெல்லியில் ‘லாட்லி பஹேன் யோஜனா’ திட்டத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என்று பாஜக தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. டெல்லி சட்டசபை தேர்தல் வாக்குறுதிகளை பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா வெளியிடுகிறார். மேலும், கருவுற்ற பெண்களுக்கு 6 ஊட்டச்சத்து தொகுப்பு மற்றும் ரூ.21,000 வழங்கப்படும், ஹோலி மற்றும் தீபாவளிக்கு இலவச சிலிண்டர் வழங்கப்படும்., ஏழை குடும்பங்களுக்கு எல்பிஜி சிலிண்டருக்கு ரூ.500 மானியம் தரப்படும் என்றும் பாஜக வாக்குறுதி அளித்துள்ளது

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நிறைவு!!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.-வாக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் 14-ந்தேதி காலமானார். அதனைத்தொடர்ந்து, டெல்லி மாநில சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும்போது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி 5-ந்தேதி வாக்குப்பதிவும், 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி கடந்த 10-ந்தேதி வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது. இன்று மதியம் 3 மணியுடன் வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்தது. திமுக சார்பில் போட்டியிடும் சந்திர குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் சீதாலட்சுமி ஆகியோர் கடைசி நாளான இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். நாளை வேட்புமனு மீதான பரிசீலனை நடைபெறும், வேட்புமனுவை திரும்பப்பெற 20-ந்தேதி கடைசி நாளாகும். அன்றைய தினம் இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அதிமுக, பாஜக உள்ளிட்ட முன்னணி கட்சிகள் தேர்தலை புறக்கணித்துள்ளன.

நாடாளுமன்றத்தில் வரும் பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல்!!

டெல்லியில் நாடாளுமன்றத்தில் வரும் பிப்ரவரி 1ம் தேதி அன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதன்மூலம், தொடர்ந்து எட்டு பட்ஜெட்களை தாக்கல் செய்த முதல் நிதியமைச்சர் என்கிற பெருமையை பெறுகிறார் நிர்மலா சீதாராமன். முன்னதாக, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 31ம் தேதி தொடங்கி பிப்ரவரி 13ம் தேதி வரை நடைபெறுகிறது.

திருப்பதியில் போலி தரிசன டிக்கெட் மோசடி; 3 பேர் கைது!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரூ.300-க்கு போலி தரிசன டிக்கெட் தயாரித்து பக்தர்களிடம் மோசடி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். போலி தரிசன டிக்கெட் விற்று பக்தர்களிடம் வசூல் செய்த 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 2 பேர் தலைமறைவு ஆகி உள்ளனர். திருப்பதியைச் சேர்ந்த மணிகண்டா, ஜெகதீஷ், டிக்கெட் ஸ்கேன் செய்யும் கோயில் ஊழியர் லட்சுமிபதி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

ஜனவரி 19-ம் தேதி 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!!

ஜனவரி 19-ம் தேதி 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்வு!!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.800 வரை உயர்ந்தது. இதனை தொடர்ந்து வார தொடக்க நாளான திங்கட்கிழமை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.58,720-க்கும், செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ. 58,640-க்கும், புதன்கிழமை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.58,720-க்கும், நேற்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.59,120-க்கும் விற்பனையானது. இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.59,600-க்கும் கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,450-க்கும் விற்பனையாகிறது. மொத்தத்தில் தங்கம் விலை நான்கு நாட்களில் சவரனுக்கு ரூ.1,160 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 104 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து நான்காயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி; தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!!

தெற்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தொடர்ந்து நீடிப்பதால் இன்று (ஜனவரி 17) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை (ஜனவரி 18) கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதன்படி நாளை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

பொங்கல் தொகுப்புடன் ரூ.2000 வழங்க கோரிய முறையீட்டில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது: உயர்நீதிமன்றம்

பொங்கல் தொகுப்புடன் ரூ.2000 வழங்க கோரிய முறையீட்டில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.2000 வழங்கக் கோரி பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் மோகன்தாஸ் வழக்கு தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரணைக்கு எடுக்க நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம்,லட்சுமிநாராயணன் அமர்வில் வழக்கறிஞர் மோகன்தாஸ் முறையீடு செய்தார்.

பிரபல இந்தி நடிகர் சயிஃப் அலிகானை கத்தியால் குத்தியவர் கைது!!

பிரபல இந்தி நடிகர் சயிஃப் அலிகானை கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரை பாந்த்ரா காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வீடு புகுந்து கத்தியால் குத்தியதில் பாலிவுட் நடிகர் சயிஃப் அலிகான் காயமடைந்தார். வீட்டுக்குள் புகுந்து பணிப்பெண்ணிடம் வாக்குவாதம் செய்த நபரை தடுத்தபோது சயிஃப் மீது தாக்குதல் நடைபெற்றது.

பாரத் பெட்ரோலியம் பைப் லைன் திட்டம்; மனு தள்ளுபடி!!

கோவை இருகூர் – கர்நாடகாவின் தேவாங்கோதி இடையே பைப் லைன் திட்டத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பாரத் பெட்ரோலியம் நிறுவனம் மேற்கொள்ளும் பைப் லைன் திட்டத்துக்கு தடை கோரி கோவை இருகூரைச் சேர்ந்த விவசாயி கணேசன் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பைப் லைன் திட்டத்துக்கு கையகப்படுத்திய நிலத்துக்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை என மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

வெளிநாடுகளில் பணம், சொத்து குவிப்பவர்களை கண்டறிய ‘சில்வர்’ நோட்டீஸ் அறிமுகம் செய்தது இன்டர்போல்!!

உள்நாட்டில் சட்டவிரோதமாக சம்பாதிக்கும் பணத்தை வெளிநாடுகளில், பதுக்குபவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க ‘சில்வர்’ நோட்டீஸை அறிமுகம் செய்துள்ளது InterPol. சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இந்த திட்டத்தில் இந்தியா உட்பட 52 நாடுகள் இணைந்துள்ளன.

சீமான் மீது சென்னையில் மேலும் 3 வழக்குகள் பதிவு!!

பெரியாரை கடுமையாக விமர்சித்ததால் சீமானுக்கு எதிராக போலீஸ் நிலையங்களில் புகார்கள் குவிந்து வருகிறது. இதுவரை சீமான் மீது 62 வழக்குகள் பதிவாகி உள்ளன. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சென்னையில் மேலும் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. திராவிட கழகம், திராவிட விடுதலைக்கழகம், வீரலட்சுமி ஆகியோர் அளித்த புகார்களின் அடிப்படையில் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை கிழக்கு சைபர் கிரைம், மேற்கு சைபர் கிரைம், சிசிபி ஆகிய இடங்களில் அளிக்கப்பட்ட புகாரின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தந்தை பெரியார் திராவிடர் கழகம் அளித்த புகாரின் பேரில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. வீரலட்சுமி அளித்த புகாரின் பேரில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சீமானுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்!!

"பெரியாரை கொள்கை ரீதியாக விமர்சிக்கலாம். மாறாக அவர் மீது அவதூறு பரப்புவதை அனுமதிக்க முடியாது” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், சீமானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், “தந்தைப் பெரியாரின் புகழ் வெளிச்சத்தை அவதூறால் மறைக்க முடியாது!தந்தைப் பெரியாரின் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில், அவரைப் பற்றி அடிப்படை இல்லாத அவதூறுகள் பரப்பப்படுவது கடுமையாக கண்டிக்கத்தக்கது. பெரியாரை சிறுமைப்படுத்தும் எந்த செயலையும் பாமக அனுமதிக்காது” இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் அப்பாவு!!

தமிழ்நாடு சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் அப்பாவு. நடப்பு ஆண்டில் முதல்முறையாக பேரவை கூட்டம் ஜன. 6ம் தேதி தொடங்கி நடைபெற்றது. முதல் நாளில் உரையை வாசிக்காமல் சட்டசபையில் இருந்து ஆளுநர் வெளியேறி இருந்தார்.

பொள்ளாச்சி விவகாரத்தில் முதலமைச்சர் வழங்கிய ஆதாரமே உண்மை : சபாநாயகர் அப்பாவு

பொள்ளாச்சி விவகாரத்தில் முதலமைச்சர் கூறியதுதான் உண்மை என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். முன்னதாக பொள்ளாச்சி விவகாரத்தில் சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்திருந்தார். பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக சபாநாயகரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதாரங்களை வழங்கினார். 24ம் தேதி புகார் அளித்த அன்றே வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பத்தினம்திட்டாவில் இளம்பெண்ணுக்கு 5 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்த 5 பேர் கைது!!

கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் இளம்பெண்ணுக்கு 5 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். 13 வயதில் இருந்து சுமார் 60 பேருக்கு மேல் பாலியல் தொல்லை என புகார் கூறப்படுகிறது. பெரும்பாலும் உறவினர்களே பாலியல் தொல்லை கொடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 10 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

ரெயில்வே டிக்கெட் மோசடி நிறுத்தப்பட வேண்டும்: உச்சநீதிமன்றம்