- Home
- /
- ஷாட்ஸ்
சீர்காழி அருகே கொட்டியம்பாளையம் கடலில் குளித்தபோது காணாமல் போனவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை சிதம்பரத்தை சேர்ந்த மோகன கிருஷ்ணன், ஜெகன்பிரதாப் ஆகியோர் கடல் அலையில் சிக்கினர். கிருஷ்ணனின் உடல் வியாழக்கிழமை கரை ஒதுங்கிய நிலையில் ஜெகன் பிரதாப்பின் உடல் இன்று கரை ஒதுங்கியது. சீர்காழி அருகே பழையாறு மீன்பிடித் துறைமுகம் அருகே ஜெகன் பிரதாப் உடல் இன்று கரை ஒதுங்கியது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட 58 வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று மாநகராட்சி கூட்டரங்கில் நடைபெற்றது. இதில், திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாதக வேட்பாளர் சீதாலட்சுமியின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மரணம் அடைந்ததால் இத்தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 5ம் தேதி நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை 8ம் தேதி நடக்கிறது.
கரூர் வெங்கமேடு காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் இளவரசன்(41). இவர் 11ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்ததையடுத்து நேற்று குழந்தைகள் நல பாதுகாப்பு நல அலுவலரிடம் பெற்றோர் புகார் அளித்தனர். அவர்கள் கரூர் அனைத்து மகளிர் போலீசுக்கு பரிந்துரைத்தனர். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் போலீஸ்காரர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து இளவரசனை நேற்று போலீசார் கைது செய்தனர்.
பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்புவோருக்காக சிறப்பு புறநகர் ரயில் சேவை இயக்கப்பட உள்ளது. தாம்பரம் – காட்டாங்குளத் காட்டாங்குளத்தூர் இடையே திங்களன்று அதிகாலை 4 மணி முதல் சிறப்பு புறநகர் ரயில் இயக்கப்படும். ஜன.20ல் காட்டாங்குளத்தூரில் இருந்து தாம்பரத்துக்கு அதிகாலை 4.00, 4,30, 5.00, 5.45, 6.20க்கு சிறப்பு ரயில்கள் புறப்படும். ஜன.20ல் தாம்பரத்தில் இருந்து காட்டாங்குளத்தூருக்கு அதிகாலை 5.05, 5.40 மணிக்கு சிறப்பு ரயில்கள் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால் சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. வள்ளுவர் சிலை விவேகானந்தர் மண்டபம், கண்ணாடி இழைப் பாலத்துக்கு சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டது. காற்றின் வேகம் குறைந்த பிறகு சுற்றுலா படகு சேவை தொடங்கப்படும் என பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவித்தது.
நீதித்துறையில் அனைவருக்கும் இடமளிக்க வேண்டும் என்பதுதான் திராவிடயிசம் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். கம்யூனிசம், செக்யூலரிசம் என பல இருந்தாலும், சமத்துவத்தை வலியுறுத்தி வருவது திராவிடயிசம். ஒரே நாடு, ஒரே தேர்தல் அரசியலமைப்புக்கு எதிரானது; இதை வேண்டுமென்றே கொண்டுவரப் பார்க்கிறார்கள் என தெரிவித்தார்.
சென்னையில் இரவு நேர கார் பந்தயம் நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதிக்கு நடிகர் அஜித் குமார் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து நடிகரும், கார் ரேசருமான அஜித் குமார் கூறியிருப்பதாவது, சென்னையில் முதல்முறையாக ஸ்ட்ரீட் ரேசிங் நடைபெற்றது. அதுவும் இரவுநேர போட்டியாக நடந்தது. இதனை சாத்தியப்படுத்திய முதலமைச்சர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு அரசுக்கு நன்றி. இந்தியாவில் மோட்டார் ஸ்ட்போர்ஸ்-க்கு மிகப்பெரிய ஊக்கமாக அது இருந்தது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மோட்டார் ஸ்போர்ட்ஸ்க்கு நிறைய நல்ல விஷயங்களை செய்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லியில் ‘லாட்லி பஹேன் யோஜனா’ திட்டத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என்று பாஜக தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. டெல்லி சட்டசபை தேர்தல் வாக்குறுதிகளை பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா வெளியிடுகிறார். மேலும், கருவுற்ற பெண்களுக்கு 6 ஊட்டச்சத்து தொகுப்பு மற்றும் ரூ.21,000 வழங்கப்படும், ஹோலி மற்றும் தீபாவளிக்கு இலவச சிலிண்டர் வழங்கப்படும்., ஏழை குடும்பங்களுக்கு எல்பிஜி சிலிண்டருக்கு ரூ.500 மானியம் தரப்படும் என்றும் பாஜக வாக்குறுதி அளித்துள்ளது
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.-வாக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் 14-ந்தேதி காலமானார். அதனைத்தொடர்ந்து, டெல்லி மாநில சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும்போது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி 5-ந்தேதி வாக்குப்பதிவும், 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி கடந்த 10-ந்தேதி வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது. இன்று மதியம் 3 மணியுடன் வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்தது. திமுக சார்பில் போட்டியிடும் சந்திர குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் சீதாலட்சுமி ஆகியோர் கடைசி நாளான இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். நாளை வேட்புமனு மீதான பரிசீலனை நடைபெறும், வேட்புமனுவை திரும்பப்பெற 20-ந்தேதி கடைசி நாளாகும். அன்றைய தினம் இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அதிமுக, பாஜக உள்ளிட்ட முன்னணி கட்சிகள் தேர்தலை புறக்கணித்துள்ளன.
டெல்லியில் நாடாளுமன்றத்தில் வரும் பிப்ரவரி 1ம் தேதி அன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதன்மூலம், தொடர்ந்து எட்டு பட்ஜெட்களை தாக்கல் செய்த முதல் நிதியமைச்சர் என்கிற பெருமையை பெறுகிறார் நிர்மலா சீதாராமன். முன்னதாக, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 31ம் தேதி தொடங்கி பிப்ரவரி 13ம் தேதி வரை நடைபெறுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரூ.300-க்கு போலி தரிசன டிக்கெட் தயாரித்து பக்தர்களிடம் மோசடி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். போலி தரிசன டிக்கெட் விற்று பக்தர்களிடம் வசூல் செய்த 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 2 பேர் தலைமறைவு ஆகி உள்ளனர். திருப்பதியைச் சேர்ந்த மணிகண்டா, ஜெகதீஷ், டிக்கெட் ஸ்கேன் செய்யும் கோயில் ஊழியர் லட்சுமிபதி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.800 வரை உயர்ந்தது. இதனை தொடர்ந்து வார தொடக்க நாளான திங்கட்கிழமை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.58,720-க்கும், செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ. 58,640-க்கும், புதன்கிழமை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.58,720-க்கும், நேற்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.59,120-க்கும் விற்பனையானது. இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.59,600-க்கும் கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,450-க்கும் விற்பனையாகிறது. மொத்தத்தில் தங்கம் விலை நான்கு நாட்களில் சவரனுக்கு ரூ.1,160 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 104 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து நான்காயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.