திருப்பதி வரும் பக்தர்களுக்கு அன்னதானமாக மசால் வடை !!

திருப்பதி
திருப்பதி வரும் பக்தர்களுக்கு இனி லட்டு மட்டுமில்லாமல் அன்னதானத்துடன் மசால் வடை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு தினந்தோறும் சுவையான அன்னதானம் வழங்கப்பட்டு தான் வருகிறது.
திருமலையில் உள்ள மாத்ரு ஸ்ரீ தரிகொண்ட வெங்கமாம்பா அன்னபிரசாத கூட்டத்தில் ஒரே நேரத்தில் நான்காயிரம் பக்தர்களுக்கு உணவு பரிமாறப்படுகிறது.
வாழை இலையில் சர்க்கரை பொங்கல், சாதம், சாம்பார், பொரியல், ரசம் ஆகியவை பரிமாறப்படும். இத்துடன் மேலும் ஒரு பிரசாதத்தை வழங்க தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இதற்காக வெங்காயம், பூண்டு இல்லாமல் மசாலா வடைகளை தயாரித்து 5,000 பக்தர்களுக்கு பரிமாறினர். மசால் வடைகள் சுவையாக இருந்ததாக பக்தர்கள் திருப்தி தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, வருகிற பிப்ரவரி 4 ஆம் தேதி ரத சப்தமி அன்று முதல் அனைத்து பக்தர்களுக்கும் மசாலா வடையுடன் அன்னதானம் வழங்க தேவஸ்தான அதிகாரிகள் முடிவு எடுத்து வருகின்றனர்.
தேவைக்கு ஏற்ற வகையில் தினமும் 50,000க்கும் மேற்பட்ட மசாலா வடைகள் தேவஸ்தான உணவுக் கூடத்தில் தயார் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.