கருட பஞ்சமியையொட்டி சிறப்பு வழிபாடுகள்

குமாரபாளையம் பெருமாள் கோவில்
குமாரபாளையம் பெருமாள் கோவில்களில் கருட பஞ்சமியையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
அனைத்து பெருமாள் கோவில்களில் கருட பஞ்சமி கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று கருட பஞ்சமிநாளை யொட்டி குமாரபாளையம், விட்டலபுரி பாண்டுரங்கர் கோவிலில் கருடாழ்வாருக்கு கருட பஞ்சமி விழா நடத்தப்பட்டது. பாண்டுரங்கர், மகாலட்சுமி தாயார், விடோபா தாயார், ஆண்டாள் தாயார், ஆஞ்சநேயர் சுவாமி மற்றும் கருடாழ்வாருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் சார்பில் பக்தி பஜனை நிகழ்ச்சி நடந்தது. இதே போல் குமாரபாளையம் ராமர் கோவில், லட்சுமி நாராயண சவாமி கோவில், தாமோதர பெருமாள் கோவில், திருவள்ளுவர் நகர் சவுந்திரராஜ பெருமாள் கோவில், தட்டான்குட்டை புருஷோத்தம பெருமாள் கோவில், சின்னப்பநாயக்கன்பாளையம் பெருமாள் கோவில், கள்ளிபாளையம் பெருமாள் கோவில், உள்ளிட்ட பல பெருமாள் கோவில்களில் கருட பஞ்சமி விழா கொண்டாடப்பட்டது.