கரூர் துயரச் சம்பவம்: நாளை பிற்பகல் உயர்நீதிமன்ற கிளையில் விசாரணை!!

கரூர் துயரச் சம்பவம்: நாளை பிற்பகல் உயர்நீதிமன்ற கிளையில் விசாரணை!!
X

karur stamepede

கரூரில் நடந்த விஜய் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் பலியான விவகாரம், தொடர்பாக நாளை மதியம் 2.15 மணி அளவில் விசாரிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

த.வெ.க. தலைவரும், நடிகருமான விஜய், வாரம்தோறும் சனிக்கிழமையன்று பிரசார கூட்டங்களை நடத்தி வருகிறார். முதல் கட்டமாக திருச்சி, அரியலூரில் பிரசாரத்தை தொடங்கிய அவர்,2-ம் கட்டமாக நாகைமற்றும் திருவாரூரில் பிரசாரம் செய்தார். அந்த வரிசையில் 3-வது கட்டபிரசாரத்தை நாமக்கல்லில் நேற்று தொடங்கினார். கரூர் வேலுச்சாமிபுரத்தில் நேற்று பகல் 12 மணியளவில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அவரை காண நேற்று காலை முதலே அந்த கட்சியின் தொண்டர்கள் ஏராளமானவர்கள் திரண்டிருந்தனர். ஆனால் விஜய்யின் பிரசார வாகனம் நேற்று மாலை சுமார் 5.40 மணியளவிலேயே கரூரை அடைந்தது. பின்னர் வழிநெடுகிலும் ஏராளமானவர்கள் திரண்டிருந்ததால், விஜய்யின் வாகனம் ஊர்ந்தவாறு பிரசார கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்தது. கட்டுக்கடங்காத கூட்டத்தால், அந்த வாகனம் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தை கடக்க சுமார் ஒன்றரை மணி நேரம் ஆனது. இதையடுத்து அவர் இரவு 7 மணியளவிலேயே கரூரில் பிரசாரம் நடைபெற்ற இடத்தை வந்தடைந்தார். அப்போது அவரது வாகனத்தை பின்தொடர்ந்து ஏராளமானவர்கள் வந்ததாலும், ஏற்கனவே பிரசாரம் நடைபெறும் இடத்தில் ஏராளமானோர் திரண்டிருந்ததாலும் அங்கு மிகுந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதற்கு மத்தியில் விஜய் அந்த பிரசார கூட்டத்தில் பேசினார். தொடர்ந்து ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக அந்த பகுதியின் அருகே உள்ள கடையின் முன்பகுதியில் ஆஸ்பெஸ்டாஸ் சீட், தென்னங்கீற்றுகள் கொண்டு அமைக்கப்பட்டிருந்த மேற்கூரைகள் சரிந்து விழுந்தன. இதில் அங்கு நின்று கொண்டிருந்த பலர் காயமடைந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் இதுவ்ரை பலியாகியுள்ளனர். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கு விசாரணைக்கு எடுக்க வேண்டும் சிசிடிவி காட்சிகளை பாதுகாக்க உத்தரவிட வேண்டும் என தவெக தரப்பில் அக்கட்சியின் வழக்கறிஞர் அறிவழகன் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தண்டபாணி, ஜோதிராமன் அமர்வில் முறையீடு செய்தார். அதில், கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த பிரச்சாரத்தின் போது மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும், திடிரென கல் வீச்சி நடத்தப்பட்டதாகவும் அதன் பின் காவல்துறை தடியடி நடத்தி இருப்பதால் ஏதேனும் சதி நடந்திருக்கலாம் என பல்வேறு சந்தேகங்கள் எழுந்திருப்பதாக தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டது இந்த முறையீட்ட கேட்ட நீதிபதிகள், மனுவாக தாக்கல் செய்ய தவெக தரப்புக்கு உத்தரவிட்டனர். மேலும் இது தொடர்பான வழக்கை நாளை மதியம் 2.15 மணி அளவில் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் விசாரிப்பதாக ஒப்புதல் அளித்துள்ளனர்.

Next Story