குடியிருப்புகள், தெருக்களில் சாதி பெயர்களை நீக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!

Tn govt
பொது பயன்பாடு மற்றும் அரசு ஆவணங்களில் இருந்து 'காலனி' என்ற சொல் நீக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். இந்த அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில், கிராமம் மற்றும் நகரங்களில் உள்ள குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நிர் நிலைகள் மற்றும் பொது கூட்டகட்டமைப்புகளில் உள்ள சாதிப் பெயர்களை நீக்கி மறு பெயரிடுவது தொடர்பாக விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் அரசாணை வெளியிட்டுள்ளார். இதன்படி, மறு பெயரிடுவது தொடர்பாக கிராமங்களில் வட்டார வளர்ச்சி அலுவலர், நகராட்சிகளில் செயல் அலுவலர் மற்றும் ஆணையர்கள் பகுப்பாய்வு மேற்கொள்ள வேண்டும். உள்ளூர் மக்களிடையே நிலவும் சூழ்நிலை மற்றும் உள்ளூர் மக்களின் கருத்துகளை பெற்றும் மதிப்பாய்வு செய்ய வேண்டும். ஆதிதிராவிடர் காலனி, ஹரிஜன் குடியிருப்பு, வண்ணான்குளம், பறையர் தெரு, சக்கிலியர் தெரு போன்ற பெயர்கள் கண்டிப்பாக மாற்றப்பட வேண்டும். கள நிலைமை மற்றும் களத்தில் உள்ள உண்மைத்தன்மையின் அடிப்படையில் கவனமாக இந்தப்பணியை மேற்கொள்ள வேண்டும். பெயர்களை மாற்ற மற்றும் மறுபெயரிய கிராம சபை மற்றும் ஏரியா சபையில் பொரும்பாண்மை ஒப்புதல் தேவை. கிராம ஊராட்சிகளின் பட்டியலை ஊராட்சி உதவி இயக்குநர், நகராட்சிகளில் உதவி இயக்குநர் மற்றும் மண்டல இயக்குநர்கள் சரிர்பாக்க வேண்டும். இறுதி செய்யப்பட்ட பெயர்களை மாவட்ட அரசிதழில் வெளியிட்டு ஆட்சேபனைகளை தெரிவிக்க 21 நாட்கள் கால அவகாசம் வழங்க வேண்டும். 21 நாட்களுக்கு பிறகு ஆட்சேபனைகளை பரிசீலனை செய்து பெயர் மாற்றம் தொடர்பான கருத்துகளை அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதன்பிறகு அரசின் அனுமதி கிடைத்த உடன் பெயர் மாற்றம் செய்வதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். இந்தப்பணிகளை எல்லாம் நவம்பர் 11ம் தேதிக்குள் முடித்து மாவட்ட அரசிதழில் அறிவிப்பு வெளியிட வேண்டும். குளம் மற்றும் நீர் நிலைகளுக்கு ரோஜா, மல்லி, செம்பருத்தி, முல்லை, செண்பகம் ஆகிய பூக்களின் பெயர்களை வைக்கலாம். தெருக்கள் மற்றும் சாலைகளுக்கு திருவள்ளூவர், கபிலர், பாரதியார், பாரதிதாசன், காந்தி, தந்தை பெரியார்,அண்ணா, காமராஜர், கலைஞர் பெயர்களை வைக்கலாம். சாதி சான்றிதழ்கள், ஆதார், குடும்ப அட்டை ஆகியவற்றில் புதிய பெயர்களை மாற்ற எல்காட் மூலமாக திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.
