மீண்டும் இலங்கை கடற்படை அட்டூழியம்' ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் கைது!!

fishermen
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மீனவர்கள் மீது தொடர்ச்சியாக இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவது, கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. மேலும், அவர்கள் செல்லும் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து நாட்டுடமையாக்கி வருகின்றனர். இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது. இது போன்ற சூழலில், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திடவும் வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார். இதற்கிடையே கைது செய்யப்படும் மீனவர்களை விடுவிக்க வேண்டுமென்றால் பல லட்சம் ரூபாய் அபராதமாக இலங்கை நீதிமன்றம் விதித்து வருகின்றது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள், மீன்பிடி துறைமுகத்தில் இருந்து உரிய அனுமதிச் சீட்டு பெற்று விசைப்படகுகளில் வழக்கம்போல் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். அதன்படி மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் 10 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்தனர். அதோடு மீனவர்களின் 3 விசைப்படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் 10 பேரையும் விசாரணைக்காக காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 10 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
