11 டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

flood
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகள் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளன. இதனால் இரு அணைகளில் இருந்தும் உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகின்றன. நேற்று பிற்பகலில் இருந்து 1 லட்சம் கன அடிக்கும் அதிகமான நீர் பிலிகுண்டு வழியாக ஒகேனக்கலுக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஒகேனக்கலில் உள்ள மெயின் அருவி, சினி பால்ஸ், ஐந்தருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. ஆகையால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும், காவிரி ஆற்றில் இரங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம் காரணமாக மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இரவு 8 மணி நிலவரப்படி அணைக்கு நீர் வரத்து 50,000 கன அடியாகவும், அணையிலிருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு வினாடிக்கு 50,500 கன அடியாகவும் உள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் இந்த ஆண்டு 5வது முறையாக மேட்டூர் அணை நிரம்ப வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட 11 டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
