அடுத்த 4 நாட்களுக்கு வெயில் கோரதாண்டவம்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

வெப்ப அலை
கோடை வெயில் உக்கிரமாக தொடங்கி இருக்கும் நிலையில் இந்த ஆண்டு கோடை காலத்தில் பாதிப்பு சற்று அதிகமாக இருக்கும் என்று ஏற்கனவே வானிலை ஆய்வு மையங்கள் அறிவித்து உள்ளன. குறிப்பாக இந்த தடவை கோடை காலத்தில் வெப்ப அலைகள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மதியம் நேரத்தில் உடலை சுட்டெரிக்கும் வகையில் வெப்ப அலைகள் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று முதல் அடுத்த 3 அல்லது 4 நாட்களுக்கு நாடு முழுவதும் வெப்பத்தின் அளவு மிக அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. நாட்டில் சராசரியாக 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப தாக்கம் அதிகரித்து இருக்கும் என்று வானிலை ஆய்வு மைய நிபுணர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இந்தியாவின் வடமேற்கு பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் வெப்ப தாக்கம் 5 டிகிரி செல்சியஸ் வரை இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிக வெப்ப தாக்கம் இருக்கலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மாநிலங்களிலும் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப தாக்கம் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இந்த வெப்ப தாக்கத்தின் பாதிப்பை இன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் உணர்ந்தனர். தமிழகத்தில் வேலூர், நாமக்கல், கரூர், திருச்சி மாவட்டங்களில் வெப்ப தாக்கம் கணிசமாக அதிகரிக்கும் என்று கூறப்பட்டு உள்ளது. சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருந்தாலும் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் வெப்பம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையமும் தெரிவித்துள்ளது. சென்னை உள்பட வடமாவட்டங்களில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு மதியம் நேரத்தில் வெப்ப காற்று வீச வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அத்தியவாசிய பணிகளுக்கு வெளியில் செல்பவர்கள் குடை, தொப்பி போன்றவற்றை பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. வயதானவர்கள் வெளியில் வருவதை தவிர்ப்பது நல்லது என்றும் வானிலை இலாகா தெரிவித்துள்ளது.