அமைச்சர் பதவியில் தொடர விருப்பம் இல்லை - சுரேஷ் கோபி!

அமைச்சர் பதவியில் தொடர விருப்பம் இல்லை -  சுரேஷ் கோபி!

சுரேஷ் கோபி

கேரள மாநிலத்தில் முதல் முறையாக பாஜகவை காலூன்ற வைத்த நடிகர் சுரேஷ் கோபிக்கு மத்திய இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்ட நிலையில், சினிமாவில் நடிக்க இருப்பதால் அமைச்சர் பதவியில் தொடர விருப்பம் இல்லை என அறிவித்துள்ளார்.

நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் கேரளா நடிகர் சுரேஷ் கோபிக்கு இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டிருந்தது. கேரளாவில் முதல் முறையாக நாடாளுமன்ற தேர்தல் வரலாற்றில் திருச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட கேரள நடிகர் சுரேஷ் கோபி வெற்றி பெற்றார்.

எம்.பியாக தேர்வு செய்யப்பட்டதுமே சுரேஷ் கோபி தனக்கு அமைச்சர் பதவியில் நாட்டம் இல்லை என்று கூறியிருந்தார். ஆனால், நேற்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் சுரேஷ் கோபியும் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். பதவியேற்ற ஒரு நாள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் சுரேஷ் கோபி தனக்கு மத்திய இணை அமைச்சர் பொறுப்பு வேண்டாம் எனக் கூறியுள்ளார்.

சினிமாவில் நடிக்க இருப்பதால் அமைச்சர் பதவியில் தொடர விருப்பம் இல்லை என அறிவித்துள்ளார். மேலும் என்னை பொறுப்பில் இருந்து விடுவிப்பார்கள் என நம்புவதாகவும் கூறியுள்ளார். ''அமைச்சர் பதவி வேண்டாம் என முன்பே கூறினேன். ஆனால் பாஜக தலைமை கேட்டுக் கொண்டதன் பேரில் பொறுப்பேற்றுக் கொண்டேன்' என தெரிவித்துள்ளார்.

Tags

Next Story