தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி வழங்குவது இல்லை : ‍ கனிமொழி!

தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி வழங்குவது இல்லை : ‍ கனிமொழி!

 கனிமொழி

தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்குவதில்லை என கனிமொழி எம்பி குற்றஞ்சாட்டினார். 
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட வானரமுட்டி, கழுகுமலை, வேலாயுதபுரம், செட்டிகுறிச்சி, மானங்காத்தான், அய்யனாரூத்து, கயத்தாறு, அகிலாண்டபுரம், கடம்பூர், காமநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களில் வாக்காளர்களை கனிமொழி சந்தித்து நன்றி கூறினார். அப்போது அவர் பேசியதாவது: தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் 2ஆவது முறையாக பணியாற்ற வாய்ப்பு அளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணிகள் சரியாக வழங்கவில்லை என பெண்கள் கூறுகின்றனர். மத்திய அரசு போதிய நிதியை ஒதுக்கீடு செய்யாததால்தான் இப்பணி வழங்க முடியவில்லை. இது மட்டும் இன்றி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியையும் மத்திய அரசு வழங்குவது இல்லை. தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் அதிகளவு வேலை வழங்குவதற்கு தமிழக முதல்வர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதவர்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு உரிமைத் தொகை கிடைக்க முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார். தகுதியுள்ள மகளிர்க்கு உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும் என்றார் அவர். தொடர்ந்து பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ. கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கா. கருணாநிதி, கழுகுமலை பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் சுப்பிரமணியன் உள்பட திமுகவினர் உடன் இருந்தனர்.

Tags

Next Story