சூடு பிடிக்கும் திருப்பரங்குன்றம் சர்ச்சை - ஒற்றுமையாக இருக்கும் இந்து முஸ்லீம் மதத்தில் பாஜக சண்டை மூட்டுகிறதா ? | முழுமையாக கிங் நியூஸ் 24x7 | KING NEWS 24X7

திருப்பரங்குன்றம் சர்ச்சை
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. கோவிலின் மலை உச்சியில் காசி விஸ்வநாதர் கோவிலும் அதன் மறுபுறத்தில் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவும் உள்ளது,
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ராஜபாளையத்தில் முஸ்லீம் மதத்தை சேர்த்த அபு தாஹிர் என்பவர், நேர்த்திகடன் செலுத்துவதற்காக ஆடு மற்றும் இரண்டு சேவல்களுடன் தர்காவுக்கு செல்ல வந்திருந்தார். இவரை "மலைக்கு மேல் அனுமதிக்க முடியாது" எனக் கூறி அங்கிருந்த காவலர்கள் அவரைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.காலம்காலமாக நேர்த்திக்கடன் கொடுப்பது வழக்கம் இப்போது ஏன் தடுக்கிறீர்கள் எனக் அப்பகுதி முஸ்லிம்கள் கேள்வி எழுப்பினர்,
இதுதொடர்பாக, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் தர்கா நிர்வாகிகள் மனு கொடுத்தனர். அப்போது அவர், வருவாய் கோட்டாட்சியர் நேரில் விசாரணை நடத்த உள்ளதாக தர்கா நிர்வாகிகளிடம் கூறியுள்ளார் பின்பு ஆய்வு நடத்திய வருவாய் கோட்டாட்சியர், இங்கு இந்துக்கள் அதிகமாக உள்ளதால் ஆடு, கோழிகளை பலியிடக் கூடாது" எனக் கூறி தடை விதித்ததாக குறிப்பிட்டார் தர்காவின் செயற்குழு உறுப்பினர் அல்தாஃப். இதனை அறிந்து கடந்த ஜனவரி மாதம் 22-ஆம் தேதி தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவரும் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான நவாஸ்கனி, திருப்பரங்குன்றம் மலைக்கு சென்றிருந்தார்,
அப்போது அவருடன் வந்தவர்கள், மலையின் படிக்கட்டில் அமர்ந்து அசைவ பிரியாணி சாப்பிட்டதாக பாஜகவும் இந்து அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன. இதன் தொடர்ச்சியாக திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணி சார்பில் வேல் ஊர்வலம் நடத்தப்பட்டது.இந்தநிலையில், ''திருப்பரங்குன்றம் மலையைக் காக்க செவ்வாய்க்கிழமையன்று (பிப்ரவரி 4) போராட்டம் நடத்த உள்ளதாக'' இந்து முன்னணி அறிவித்தது,
ஆனால், போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை. ''போராட்டம் நடத்தினால் இரு தரப்பிலும் அசாதாரண சூழல் உருவாகும்'' எனக் கூறி மதுரையில் 144 தடை உத்தரவை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்தார்,
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''ஆர்ப்பாட்டத்தில் தென்மாவட்டங்களில் இருந்து பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்ள உள்ளதால் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இந்து, இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்தோர் திருப்பரங்குன்றம் மலை குறித்து பல்வேறு கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். இதன் காரணமாக இரு அமைப்பினர் இடையே அசாதாரண சூழல் உருவாக வாய்ப்புள்ளது. மதுரை மாவட்டம் மற்றும் மாநகரில் வெளிநபர்கள் பிரவேசிக்காத வகையில் பிப்ரவரி 3 முதல் 4 ஆம் தேதி இரவு 12 மணி வரையில் போராட்டம், கூட்டங்கள் மற்றும் தர்ணா போன்றவற்றுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது'' என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது,
இதுகுறித்து பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசும்போது, "மதுரையில் ஜனநாயக முறையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு இந்து முன்னணி திட்டமிட்டது. ஆனால், மக்களைத் தூண்டுவதற்காக தற்காலிகமாக தடை உத்தரவு போட்டுள்ளனர்" என்றார் அரசின் தடை உத்தரவு ஒருபுறம் இருந்தாலும், கோவிலில் சாமி தரிசனம் சென்ற பக்தர்களைக் காவல்துறை தடுக்கவில்லை,
"திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றி சாலை வசதி உள்பட எத்தனையோ பிரச்னைகள் உள்ளன. அதைத் தீர்ப்பதற்கு எவ்வித முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால், ஆடு, கோழிகளை மையமாக வைத்து பதற்றமான சூழலை ஏற்படுத்துகின்றனர்" எனக் கூறுகிறார் அல்தாஃப்,
திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஊடகங்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்,
> "அரசின் நிலைப்பாடு என்பது எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான். அவரவர் விரும்பும் மத சடங்குகள், முன்னோர்கள் எப்படி பின்பற்றி வந்தார்களோ அதே நிலை தொடர்ந்தால் அமைதியான சூழல் தொடரும்" ,
> "எந்த மதமாக இருந்தாலும் வழிபாட்டு நெறிமுறையில் அமைதி நிலவ வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம். இதைப் பொதுப் பிரச்னையாக மாற்றிவிட வேண்டாம்" ,
> "மதம், சாதி, இனங்களுக்கு அப்பாற்பட்டு அனைவரும் மனிதர்கள் என்ற நிலையில் இதை அணுக வேண்டும். யாருக்கும் சாதகமான சூழலை ஊடகங்கள் எடுத்துச் செல்ல வேண்டாம்" எனக் கூறியுள்ள சேகர்பாபு, "நீதிமன்றத்தில் இந்த வழக்கு இருப்பதால் மேலும் விரிவாக பேசுவது சரியானதாக இருக்காது" எனத் தெரிவித்தார்.