ஷாட்ஸ்

அமெரிக்காவில் இருந்து 3258 இந்தியர்கள் நாடு கடத்தல்: ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர்

2025 ஜனவரி முதல் தற்போது வரை அமெரிக்காவில் இருந்து 3258 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர் என மாநிலங்களவையில் ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் பதில் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு 1368 பேர் நாடு கடத்தப்பட்ட நிலையில், சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் நடவடிக்கைகளை ட்ரம்ப் தீவிரப்படுத்தியதால் இந்தாண்டு எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. 2009ல் இருந்து மொத்தம் 18,822 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

அந்தமான் கடலில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டரில் 4.5 ஆக பதிவு!!

அந்தமான் கடலில் நள்ளிரவு 12.02 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவானது. இதனால், அந்தமான் நிகோபார் தீவுகளின் சில பகுதிகளில் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டது.

திருப்பரங்குன்றம் தீபம்: போராட்டம் நடத்திய நயினார் நாகேந்திரன் மீது வழக்குப்பதிவு!!

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பாக போராட்டம் நடத்திய நயினார் நாகேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நயினார் நாகேந்திரன் உட்பட 93 பேர் மீது வழக்கு திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியது, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தமிழ்நாட்டில் 10 மணிக்குள் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!

தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிக்குள் சென்னை உள்பட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை,திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக-பாஜக கூட்டணியில் யாரும் சேரவில்லை: துணை முதல்வர் உதயநிதி

அதிமுக-பாஜக கூட்டணி அமைத்து 8 மாதங்கள் ஆகியும் இதுவரை எந்தக் கட்சியும் அக்கூட்டணியை நம்பி போகவில்லை என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். அமித்ஷாவை யார் பாராட்டிப் பேசுவது என்பதுதான் அதிமுக அணிகளுக்கு இருக்கும் ஒற்றுமை. வெறுப்பு அரசியல் செய்யும் அதிமுக - பாஜக கூட்டணியை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

டெல்லியில் 23வது உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார் புதின்!!

டெல்லியில் இந்தியா-ரஷ்யாவின் 23வது வருடாந்திர உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின் பங்கேற்கிறார். பாதுகாப்பு, விண்வெளி, எரிசக்தி, ராணுவம் தொடர்பாக பிரதமர் மோடி - ரஷ்ய அதிபர் புதின் இன்று ஆலோசனையில் ஈடுபட உள்ளனர்.

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!!

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் காலை 10 மணிக்குள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யலாம்.

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 13.4 செ.மீ. மழைப் பதிவு!!!

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 13.4 செ.மீ. மழைப் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக பாரிமுனையில் 26.5 செ.மீ., எண்ணூரில் 26.4 செ.மீ., ஐஸ் அவுஸில் 23.1 செ.மீ, பேசின் பிரிட்ஜ்-ல் 20.7 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது.

தொழில்நுட்ப கோளாறால் நடுவழியில் நிற்கும் சென்னை மெட்ரோ ரயில்!!

சென்னை விமான நிலையத்தில் இருந்து விம்கோ நகருக்கு நோக்கி வந்த மெட்ரோ ரயில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடுவழியில் பழுதாகி நின்றது. சென்ட்ரல் மெட்ரோ நிலையத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நடுவழியில் நின்றதால் பயணிகள் தவித்தனர். சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக பயணிகள் ரயில் உள்ளே சிக்கிக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்மழை காரணமாக சென்னையில் 8 இடங்களில் மரங்கள் சாய்ந்தன!!

தொடர்மழை காரணமாக சென்னையில் 8 இடங்களில் மரங்கள் சாய்ந்தன. சென்னையில் நேற்று இரவு பலத்த காற்றுடன் பெய்த மழையால், சென்னை திருவல்லிக்கேணி செம்பியம், வில்லிவாக்கம் கீழ்ப்பாக்கம் உள்பட 8 இடங்களில் மரங்கள் சாய்ந்தன. தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து இரவோடு இரவாக மரங்களை அறுத்து அப்புறப்படுத்தினர்.

சென்னையில் பலத்த காற்றுடன் தொடர்ந்து மழை!!

சென்னையில் பலத்த காற்றுடன் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னை நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, கிண்டி, ஆலந்தூரில் மழை பெய்து வருகிறது. சென்னையில் இருந்து 50 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வங்கக் கடலில் பல மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ளது. கரையை கடக்கும் போது சென்னை, திருவள்ளூரில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார்.

பாமக போராட்டம் ஒத்திவைப்பு!!

தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து சென்னையில் நாளை நடைபெற இருந்த பாமக போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பாமக தலைவராக அன்புமணியை அங்கீகரித்ததை கண்டித்து ராமதாஸ் அணி போராட்டம் அறிவித்திருந்தது. இந்நிலையில் சென்னையில் பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நாளை நடைபெற இருந்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக போராட்டம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என பாமக தெரிவித்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.94,720க்கு விற்பனை!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.94,720க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.11,840க்கும், வெள்ளி விலை கிராம் ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் ரூ.183க்கும் விற்பனையாகிறது.

மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் டிட்வா புயல்!!

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள டிட்வா புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 7 கி.மீ வேகத்தில் வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்த டிட்வா புயலின் வேகம் சற்று குறைந்துள்ளது. சென்னைக்கு 540 கி.மீ தூரத்தில் தெற்கு திசையில் டிட்வா புயல் மையம் கொண்டுள்ளது.

6 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் விரைந்தது!!

கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து மீட்புப் பணிகளுக்காக 6 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் விரைந்தனர். ஒரு அணிக்கு 30 பேர் வீதம் தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், திருவாரூருக்கு தலா 1 அணி மற்றும் புதுச்சேரிக்கு 2 அணிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

ராமேஸ்வரத்தில் பலத்த சூறைக்காற்று, கனமழை காரணமாக ரயில்கள் மண்டபத்தில் நிறுத்தம்!!

ராமேஸ்வரத்தில் பலத்த சூறைக்காற்று, கனமழை காரணமாக ரயில்கள் மண்டபத்தில் நிறுத்தப்பட்டன. கன்னியாகுமரி - ராமேஸ்வரம், சென்னை - ராமேஸ்ரம் ரயில்கள் மண்டபத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்லும் ரயில் மண்டபத்தில் இருந்து புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.28) ஒருநாள் விடுமுறை அறிவிப்பு!!

தொடர் கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று(நவ.28) விடுமுறை அளித்து மாவட்டம் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். சென்னைக்கு 620 கி.மீ. தூரத்தில் தெற்கு, தென்கிழக்கு திசையில் டிட்வா புயல் மையம் கொண்டுள்ளது.

தமிழக ஆளுநரை கண்டித்து டிச 4ல் ஆர்ப்பாட்டம்: மன்னார்குடியில் கி. வீரமணி அறிவிப்பு!!

அமைதி பூங்காவாக திகழ்ந்து வரும் தமிழ்நாட்டின் மீது அவதூறு பரப்பும் வகையில் பேசி வரும் ஆளுநர் ஆர். என் ரவியை கண்டித்து டிசம்பர் 4 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் திக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மன்னார்குடியில் திக தலைவர் கி. வீரமணி அறிவித்துள்ளார்.

செங்கோட்டையனுக்கு தவெக-வில் என்ன பதவி தெரியுமா?

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ள செங்கோட்டையனுக்கு அக்கட்சியின் உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதுக்குறித்து விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், செங்கோட்டையன் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 28 பேர் கொண்ட எனது கண்காணிப்பில் இயங்கும் கழக உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படுகிறார். இவர் இக்குழுவை வழிநடத்தி கழகத்தின் அரசியல் செயல்பாடுகளை முன்னெடுக்க எனக்கு உறுதுணையாகச் செயல்படுவார். மேலும், கூடுதலாக ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு அமைப்புச் செயலாளராகவும் நியமிக்கப்படுகிறார். என்னோடும், பொதுச்செயலாளருடனும் கலந்தாலோசித்து கழகப் பணிகளை மேற்கண்ட மாவட்டங்களில் மேற்கொள்வார். 

தவெகவில் செங்கோட்டையன் இணைந்ததால் அதிமுக-பாஜக கூட்டணிக்கு பாதிப்பில்லை: நயினார் நாகேந்திரன்

தவெகவில் செங்கோட்டையன் இணைந்ததால் அதிமுக-பாஜக கூட்டணிக்கு பாதிப்பில்லை என நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்துள்ளார். செங்கோட்டையன் தவெகவில் இணைந்ததால் அதிமுகவுக்கு பாதிப்பு ஏற்படுமா என்பதை உறுதியாக சொல்ல முடியாது. பாஜகவை செங்கோட்டையன் நம்பி இருந்ததாக கூறுவது ஏற்புடையதல்ல என்று கூறியுள்ளார்.