மணல்மேடு அருகே கருகிய நிலையில் இளம்பெண் உடல் மீட்பு
மீட்கப்பட்ட உடல்
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணல்மேடு அருகே கரூர் - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், சாலையோரம் உடல் கருகி நிலையில் இளம்பெண்ணின் உடல் கிடந்துள்ளது. இன்று காலை அவ்வழியாக சென்ற பொதுமக்கள், உடல் கருகிய நிலையில் கிடப்பதை பார்த்து அரவக்குறிச்சி காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், கருகிய நிலையில் இருந்த பெண் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உடல் முழுவதும் கருகிய நிலையில் உயிரிழந்த பெண்ணின் கழுத்தில் திருமணம் ஆனதற்கான தாலிக்கொடியும், இடது காலில் மெட்டியும் அணிந்திருந்தது தெரிய வந்துள்ளது. இறந்த பெண்ணிற்கு 30 லிருந்து 35 வயது குள்ளாக இருக்கும் எனவும் மதிப்பீடு செய்துள்ள காவல் துறையினர், இளம்பெண் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்து சாலையோரம் வீசப்பட்டாரா? என்ற கோணத்தில் அரவக்குறிச்சி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அடையாளம் தெரியாத பெண்ணின் உடல் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட விவகாரம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது