இளைஞர் கொலை வழக்கு : 3பேர் கைது

இளைஞர் கொலை வழக்கு : 3பேர் கைது

கைதான மூவர்


வேலூர் கோட்டை பெரியார் பூங்காவுக்கு அருகே அகழி பகுதியில் கடந்த செப்டம்பர் 19}ஆம் தேதி மிதந்த மூட்டையை போலீசார் அவிழ்த்து பார்த்தனர். அப்போது அதில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரின் உடல் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கழுத்து, மார்பு பகுதியில் கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் சிகப்பு நிற தரை விரிப்பானில் வைத்து கல்லுடன் கட்டி அகழி பகுதியில் வீசப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த கொலைச் சம்பவம் குறித்து வடக்கு போலீஸசார் வழக்குப்பதிவு செய்ததுடன் வேலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் மணிவண்னன் ஆலோசனைபடி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப் பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

மேலும், கொலை செய்யப்பட்டவர் யார் என்பது குறித்து அறிந்திட தமிழகம், ஆந்திர மாநிலங்களில் சுமார் 10000 நபர்க ளின் விவரங்களும் சேகரிக்கப்பட்டதுடன், இறந்தவரின் புகைப்படம், அங்க அடையாளங்களைக் கொண்டு துண்டுபிரசுரங்கள் அச்சிட்டு விநியோகித்தும், சுவரொட்டிகள், சந்தேக நபர்களை பிடித்தும் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இதில், கொலை செய்யப்பட்டவர் ஆந்திர மாநிலம் சித்தூர் பெத்தராசப்பள்ளியைச் சேர்ந்த லிக்கு என்கிற செல்லாசிரஞ்சீவி என்பது தெரியவந்தது. மேலும், இவரை சென்னையைச் சேர்ந்த அஜித்(21), விக்கி, மாரிமுத்து(21), ஜெயஸ்ரீ(22), வேலூர் பாகாயத்தைச் சேர்ந்த பரதன்(30), அப்பு(24), பத்ரி(23), லட்சுமணன் ஆகியோர் அடித்துக் கொலை செய்துவிட்டு உடலை மூட்டையாகக் கட்டி வேலூர் அகழியில் வீசிச் சென்றது தெரியவந்தது.

இதில், மாரிமுத்து, பத்ரி ஆகியோர் வேறொரு வழக்கில் ஏற்கனவே சென்னை புழல், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், தலைமறைவாக இருந்த பரதன், அப்பு, ஜெயஸ்ரீ ஆகிய மூன்று பேரும் திங்கள் கிழமை கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள அஜித், விக்கி, லட்சுமணன் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதுகுறித்து வேலூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு கூறுகையில், கொலை செய்யப்பட்ட செல்லாசிரஞ்சீவி உள்பட அனைவரும் திருட்டுத் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். எனினும், அஜித், விக்கி, மாரிமுத்து, ஜெயஸ்ரீ உள்ளிட்ட 8 பேரும் செய்து வந்த திருட்டு குறித்து செல்லாசிரஞ்சீவி போலீசாருக்கு காட்டிக் கொடுத்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவர்கள் செல்லாசிரஞ்சீவியை கொன்று மூட்டை கட்டி வேலூர் கோட்டை அகழியில் போட்டுச் சென்றிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்

Tags

Next Story