போதையில் தகராறு - பிஎஸ்என்எல் பொறியாளரை கொலை செய்த மனைவி

போதையில் தகராறு - பிஎஸ்என்எல் பொறியாளரை கொலை செய்த மனைவி

சம்பவம் நடந்த வீடு 

குடிபோதையில் தகராறு செய்த கணவனை கழுத்தை நெறித்து கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம், துறையூர் தேவாங்கர் நகர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் அண்ணாதுரை (55). இவர் துறையூர் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பத்மினி (52) மற்றும் லலிதா என்ற இரண்டு மனைவிகள். முதல் மனைவி பத்மினியை காதல் திருமணம் செய்துள்ளார். பத்மினிக்கு ஒரு மகள் திருமணம் ஆன நிலையில் வெளியூரில் வசித்து வருகிறார்.

இரண்டாவது மனைவிக்கு குழந்தை இல்லை. மாடி வீட்டில் முதல் மனைவியும் கீழே உள்ள வீட்டில் இரண்டாவது மனைவியுடனும் வசித்து வந்துள்ளார். இவர் குடிபோதையில் அடிக்கடி முதல் மனைவி பத்மினியுடன் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை சுமார் 5 மணி அளவில் குடிபோதையில் இருந்த அண்ணாதுரை மாடியில் இருந்த முதல் மனைவி பத்மினியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பத்மினி கயிறு மூலம் கணவனின் கழுத்தை நெறித்துள்ளார் . இதில் மயங்கி விழுந்த அண்ணாதுரை சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். தகவல் அறிந்த துறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அண்ணாதுரையின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பத்மினியை கைது செய்து சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story