25 கிலோ கஞ்சா கடத்தல் - பெண் உட்பட 2 பேர் கைது

ஆந்திர மாநிலத்திலிருந்து 25 கிலோ கஞ்சா கடத்தி வந்த பெண் உள்பட 2 பேரை தஞ்சாவூர் அருகே காவல் துறையினர் கைது செய்தனர்.

தஞ்சாவூர் அருகே வல்லம் தேசிய நெடுஞ்சாலையில் வல்லம் காவல் ஆய்வாளர் ராஜேஷ், உதவி ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, வல்லம் பிரிவு சாலையில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்ற பெண் உள்பட 2 பேரை காவல் துறையினர் பிடித்து விசாரணை செய்தனர். இதில், இருவரும் கடலூர் மாவட்டம், விருத்தாசலம் மணவாளநல்லூரைச் சேர்ந்த அண்ணாமலை மகன் வேல்முருகன் (37), தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி மூலக்கடையைச் சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி சோலையம்மாள் (38) என்பதும், இருவரும் வைத்திருந்த சாக்குப் பையில் 25 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்ததும், தஞ்சாவூரில் விற்பதற்காக கஞ்சா பொட்டலங்களை ஆந்திர மாநிலத்திலிருந்து கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, வல்லம் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனர்.



Tags

Next Story