ராசிபுரம் :50 கிலோ கஞ்சாவுடன் 4 பேர் கைது- ஒருவருக்கு வலை

ராசிபுரம் :50 கிலோ கஞ்சாவுடன் 4 பேர் கைது- ஒருவருக்கு வலை

கைதானவர்களுடன் போலீசார் 

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரையில் 89 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 124 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு, 114 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் - மதுவிலக்கு பிரிவு ஏ.டி.எஸ்.பி.ராஜு

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஆண்டகலூர்கேட் பகுதியில் ராசிபுரம் காவல் உதவி ஆய்வாளர்கள் தங்கம், சிவா தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் செய்துகொண்டிருந்தனர். அப்போது, ஆண்டகளூர்கேட் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி பின்புறம் உள்ள மதில் சுவருக்கு அருகே, சக்திவேல் கோழிப்பண்ணைக்கு செல்லும் வழியில் TN 40 X 6006 பதிவு எண் கொண்ட வெள்ளை நிற இனோவா காரும், TN 28 CY 1933 என்ற பதிவு எண் கொண்ட பைல்சர் இருசக்கர வாகனமும் நின்று கொண்டிருந்தது. அதன் அருகே இருந்த நான்கு பேர் போலீசாரைக் கண்டதும் தப்பி ஓட முயன்றனர்.

அவர்களை துரத்தி பிடித்து, வாகனத்தை சோதனை செய்ததில், 50 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. தொடர் விசாரணையில் ஓசூரில் இருந்து கொண்டுவரப்பட்டதும், இதன் மதிப்பு ரூ.10 லட்சம் என்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, சேலம் மாவட்டம் கருப்பூர் புதுத்தெரு பகுதியைச் சேர்ந்தவரும் தற்போது, கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் விருப்பாச்சி நகரில் வசித்து வரும் சதீஸ் (எ) கந்தசாமி (30), இதே பகுதியைச் சேர்ந்த முருகேசன் (46) நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் கட்டணாச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்த தினேஷ்(25), இதே பகுதியைச் சேர்ந்த கார்த்தி(26) ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

ராசிபுரம் அருகே 50 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து, மதுவிலக்கு பிரிவு ஏ.டி.எஸ்.பி.ராஜு பேட்டி அளித்தார். அப்போது, ராசிபுரம் அருகே ஆண்டுகளூர்கேட் பகுதியில், வியாபார நோக்கத்திற்காக கொண்டுவரப்பட்ட 50 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, பிணையில் வரமுடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நான்கு பேரை கைது செய்துள்ளோம். நாமக்கல் மாவட்டத்தில் இதுவரையில் 89 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 124 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு, 114 எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 19 எதிரிகளின் வங்கி கணக்கில் இருந்து, 2 லட்சத்து 10,660 ரூபாய் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவர்களின் சொத்துக்களும் முடக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல், நாமக்கல் மாவட்டத்தில், 690 குட்கா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 7663 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்குஉணவு பாதுகாப்பு துறை மூலம், ஒரு லட்சத்து, 75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 50 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என்றார்.



Tags

Next Story