வெள்ளி வியாபாரி கொலை - 2 கூலிப்படையினர் கைது

சங்கர்
சேலம் செவ்வாய்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 45). வெள்ளி வியாபாரியான இவர், கடந்த 2-ந் தேதி காலை கார் ஏற்றி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் சங்கரின் மைத்துனர் சுபாஷ்பாபு கூலிப்படையை ஏவி அவரை கொலை செய்திருப்பது தெரியவந்தது. செவ்வாய்பேட்டை இன்ஸ்பெக்டர் தேவராஜன், சுபாஷ்பாபுவை கைது செய்து விசாரணை நடத்தினார்.
அப்போது, மனைவி தன்னை விவாகரத்து செய்ததற்கும், குழந்தைகளை பார்க்க விடாமல் தடுத்ததற்கும் சங்கர் தான் காரணம். எனவே, அவரை கூலிப்படையை ஏவி கொலை செய்ததாக சுபாஷ்பாபு போலீசாரிடம் கூறினார். மேலும் கடந்த 3 மாதத்திற்கு முன்பே அவர் கூலிப்படையினருக்கு ரூ.2 லட்சம் கொடுத்துவிட்டார். அதன்பிறகு கூலிப்படையினர் தொடர்ந்து வெள்ளி வியாபாரி சங்கரின் நடவடிக்கையை கண்காணித்து வந்தனர். சம்பவத்தன்று வீட்டில் இருந்து பால் வாங்க சென்றபோது, காரை ஏற்றி கொலை செய்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இந்த கூலிப்படைக்கு பிரபல ரவுடி ஒருவர் தலைவராக இருந்து செயல்பட்டு வந்துள்ளார். அவர்தான் தனது கூட்டாளிகளை வைத்து கார் ஏற்றி கொன்றுள்ளார். இதையடுத்து கொலையாளிகளை பிடிப்பதற்கு இன்ஸ்பெக்டர் தேவராஜன், அன்னதானப்பட்டி இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கொலையாளிகளை வலைவீசி தேடி வந்தநிலையில் நேற்று கூலிப்படையை சேர்ந்த 2 பேர் சிக்கியுள்ளனர். அவர்களிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
