கம்ப்யூட்டர் வேலையா.. அப்போ தினமும் இந்த விஷயங்களை செய்தால் கண் ஹெல்தியாவும் இருக்கும் !!

கம்ப்யூட்டர் வேலையா.. அப்போ தினமும் இந்த விஷயங்களை செய்தால் கண் ஹெல்தியாவும் இருக்கும் !!

கண் 

நம் உடலின் முக்கிய உறுப்புகளில் ஒன்று கண்கள். இன்றைய நிலையில் கண்களுக்கு அதிக வேலையை கொடுக்கிறோம். இதனால் உடலின் மற்ற உறுப்புகளை போன்றே கண்களும் விரைவில் பாதிக்கப்படுகிறது. கண் பார்வை மிக மிக முக்கியம் அதனால் பார்வையில் ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டால் உடனடியாக கண் மருத்துவரை அணுக வேண்டும். கண் பார்வையை பாதுகாக்க தினசரி செயல்பாடுகளின் போதும் பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.

*உங்கள் கண்களுக்கு சிறிது ஓய்வு கொடுப்பது அவசியமாகிறது. போதுமான தூக்கம் இல்லாமை, கண் சோர்வுக்கு வழிவகுக்கும். சோர்வான கண்களுக்கான அறிகுறிகள், கண் எரிச்சல், கவனம் செலுத்துவதில் சிரமம், கண்களில் வறட்சி அல்லது அதிகப்படியான கண்ணீர் வடிதல், மங்கலான பார்வை, ஒளி உணர்திறன் மற்றும் அதிகபட்சமாக கழுத்து மற்றும் தோள்களில் வலி ஆகியவை ஆகும். அதனால் தினசரி இரவு 7-8 மணி நேரம் தூக்கம் தேவை.

*சூரிய ஒளி புற ஊதா கதிர்களிலிருந்து பாதுகாக்க கூலிங் கிளாஸ்கள் நீங்கள் வெயிலில் அடியெடுத்து வைக்கும் போதெல்லாம் UV பாதுகாப்பு சன்கிளாஸ்களைப் பயன்படுத்த மறக்க கூடாது. அதே நேரம் நீங்கள் பயன்படுத்தும் சன்கிளாஸின் லென்ஸ்கள் 99% முதல் 100% UVA மற்றும் UVB கதிர்களைத் தடுக்கின்றனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது. மேலும் UV சன்கிளாஸைப் போட்டுக் கொண்டாலும், சூரியனை நேரடியாகப் பார்க்கவேண்டாம். இது உங்கள் கருவிழிகளை பாதிக்கும். அதனால் பார்வை குறைபாடு ஏற்படும் அபாயமும் உள்ளது.

*உங்கள் கண்களை பராமரிக்கவும், ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்தை பேணவும், தனிமனித சுகாதாரம் அவசியம். வெளியே சென்றுவிட்டு வந்ததும் முகம், கைகால்களை சுத்தம் செய்யவேண்டும். உங்கள் முகத்தில் படிந்திருக்கும் அழுக்கு, தூசி துகள் ஏதேனும் இருப்பின், அவை உங்கள் கண்களில் படுவதற்கு முன்னர் கழுவி விட வேண்டும். கண்களை கைகளை கொண்டு அழுந்த தேய்க்க கூடாது. அதனால், உங்கள் கைகளில் இருக்கக்கூடிய அழுக்கு, பாக்டீரியா போன்றவை கண்களில் சென்று தொற்று உண்டு செய்யலாம். மேலும் கண்பார்வை குறைபாட்டுக்கு காண்டாக்ட் லென்ஸ் அணிந்திருந்தால், கைகளால் அழுந்த தேய்க்கும் போது அது கிழியவும் வாய்ப்புள்ளது.

*உணவு முறையில் ஊட்டச்சத்துக்கள் அடங்கிய பழங்கள் மற்றும் பச்சை காய்கறிகள் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால் உடலுக்கும், கண்களுக்கும் ஆக்ஸிஜனேற்றம் அதிகரிக்கும். குறிப்பாக ஒமேகா- 3 நிரம்பிய மீன் அல்லது மீன் எண்ணெய் மாத்திரைகளை உட்கொள்வதால், கண்களை பாதிக்கும் மாகுலர் சிதைவை தடுக்கலாம்.

*கம்ப்யூட்டர் மானிட்டர்கள் மற்றும் லேப்டாப் திரைகள் உங்கள் கண்களில் இருந்து ஒரு கை தூரத்தில் வைக்கப்பட வேண்டும் மற்றும் கண் மட்டத்திலிருந்து 20 டிகிரி கீழே இருக்க வேண்டும். கணினியில் நீங்கள் பணிபுரியும் போது, ​​உங்கள் அறையில் போதுமான வெளிச்சம் இருப்பதை உறுதிசெய்யவும். 20 நிமிடங்களுக்கும், உங்கள் கணினியிலிருந்து பார்வையை விலக்கி, 20 அடி தொலைவில் உள்ள ஒரு பொருளின் மீது 20 வினாடிகள் பார்வையை நிலைநிறுத்தவும்.வறட்சியைத் தடுக்க அடிக்கடி கண் சிமிட்டவும். அதேபோல ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் எழுந்து சில அடிகள் நடக்க வேண்டும். திரையில் இருந்து விலகிச் செல்வது உங்கள் கண்களுக்கு ஓய்வு தருவதோடு, உங்கள் உடலின் தோரணையையும் மேம்படுத்துகிறது.

*உங்கள் கண்களை குறிப்பிட்ட இடைவெளியில் தவறாமல் பரிசோதிக்க வேணும். சில சமயங்களில் கண் கோளாறுகள், அறிகுறிகள் இன்றி உருவாக கூடும் என்பதால், உங்கள் பார்வையைப் பாதுகாக்க, வழக்கமான பரிசோதனைகளை மேற்கொள்வது முக்கியம். அதே போன்று கண்ணாடி அணிபவராக இருந்தாலும் லென்ஸ் அணிந்தாலும் கண்களின் பவர்-ஐ அவ்வப்போது பரிசோதித்து கொள்வதும் கண் பார்வை குறைபாடு தீவிரத்தை தடுக்க உதவும்.

Tags

Next Story