2024 நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது - உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்!

2024 நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது - உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்!

உச்ச நீதிமன்றம் 

நீட் வினாத்தாள் கசிவைத் தடுக்க நவீன தொழில்நுட்பத்துடன் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீட் தேர்வில் இதுவரை இல்லாத அளவாக, 67 பேர், 720க்கு 720 மதிப்பெண் பெற்றனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. வினாத்தாள் லீக் ஆனது, கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது, ஆள் மாறாட்டம், ஓ.எம்.ஆர்., எனப்படும் விடைத்தாளில் மோசடி என, பல மோசடிகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன. 40க்கும் மேற்பட்ட மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கலாகின.

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமயிலான பெஞ்ச் விசாரித்தது. இன்றைய விசாரணையில், ''நீட் வினாத்தாள் கசிவு பாட்னா மற்றும் ஹசாரிபாக்-ல் உள்ள மையங்களில் மட்டுமே நடந்துள்ளதால் மொத்த தேர்வையும் ரத்து செய்வது சரியல்ல. தேர்வு முறையில் உள்ள குறைபாடுகளை நிபுணர் குழு அமைத்து சரி செய்ய வேண்டும்.

நீட் வினாத்தாள் கசிவைத் தடுக்க நவீன தொழில்நுட்பத்துடன் கூடுதல் கவனம் தேவை. வினாத்தாள் கசிவைத் தடுக்க சைபர் செக்யூரிட்டி பயன்படுத்த வேண்டும்.

அதே நேரத்தில் இஸ்ரோ முன்னாள் சேர்மன் ராதாகிருஷ்ணன் தலைமையில் தேர்வு சீரமைப்பு தொடர்பாக அமைக்கப்பட்டிருக்கும் பரிந்துரை அறிக்கையை வரும் செப். 30 க்குள் தாக்கல் செய்ய வேண்டும். தேர்வு முறைகளை வலுப்படுத்த ஏற்று கொள்ளக்கூடிய வழிமுறைகளை உருவாக்க வேண்டும்.'' இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


Tags

Next Story