விநாயகர் சிலை ஊர்வலத்தில் மோதல்: மாண்டியாவில் 144 தடை உத்தரவு!!
Mandya 144
விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாடு முழுவதும் கடந்த 7-ம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. மக்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலை வைத்து வழிபட்டு வருகின்றனர். பொது இடங்களிலும் விநாயகர் சிலை வைக்கப்பட்டு பூஜை நடத்தப்படுகிறது. பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் முன்கூட்டியே கரைக்கப்படுகின்றன. இந்நிலையில், கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் நேற்று இரவு நீர்நிலையில் கரைக்க ஊர்வலமாக எடுத்துச்சென்றனர். நாகமங்கலா என்ற பகுதியில் இஸ்லாமிய மத வழிபாட்டு தலம் அமைந்துள்ள பகுதி அருகே ஊர்வலம் சென்றது. அப்போது இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு, வன்முறையானது. இரு தரப்பும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த வன்முறையை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். விநாயகர் சிலை கரைப்பின் போது ஏற்பட்ட வன்முறையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.