மே.வங்க அரசுக்கு எம்.பி. ஹர்பஜன் சிங் கடிதம்: அவசர ஆலோசனைக்கு மேற்கு வங்க ஆளுநர் அழைப்பு

மே.வங்க அரசுக்கு எம்.பி. ஹர்பஜன் சிங் கடிதம்: அவசர ஆலோசனைக்கு மேற்கு வங்க ஆளுநர் அழைப்பு

ஹர்பஜன் சிங்

முன்னாள் கிரிக்கெட் வீரரும் ஆம் ஆத்மி எம்.பி.யுமான ஹர்பஜன் சிங் மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் மற்றும் முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோருக்கு கடிதம் எழுதிய நிலையில் மேற்கு வங்க ஆளுநர் அவசர ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதனை ஆளுநர் மாளிகை ஊடகப் பிரிவு உறுதி செய்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கா் என்ற அரசு மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் கடந்த வாரம் இரவு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அவர், மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

அவரது உடலை மீட்டு பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் எதிர்ப்பு தெரிவித்து ஹர்பஜன் சிங் மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் மற்றும் முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் ஆளுநர் மாளிகை ஊடகப் பிரிவு பகிர்ந்த பதிவில், “ஆர்.ஜி.கர் மருத்துவமனை துயரச் சம்பவம் குறித்து கவலை தெரிவித்து ஹர்பஜன் சிங்கின் அனுப்பியுள்ள கடிதத்தின் மீது ஆளுநர் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக அவசர ஆலோசனைக் கூட்டத்துக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். சமூகத்தின் அனைத்து தரப்பினரும் இவ்விவகாரத்தில் தங்களது கருத்துகளை முன்வைக்குமாறு கோரியுள்ளார். மேலும், இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரத்தையும் கோரவிருக்கிறார். இந்த சம்பவத்தில் இதுவரை எடுக்கப்பட்ட, எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து ஹர்பஜன் சிங்குக்கு ஆளுநர் தெரிவிப்பார். இந்த துயரச் சம்பவம் குறித்து ஆழ்ந்த அக்கறையை வெளிப்படுத்திய பொது சமூகத்துக்கு தனது ஆதரவைத் தெரிவிக்கிறார் ஆளுநர். அதேபோல் இவ்விவகாரத்தில் அரசாங்கத்தின் செயல்பாடின்மையை சுட்டிக்காட்டப்படுள்ளதையும் ஆளுநர் ஆமோதிக்கிறார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஹர்பஜன் சிங் எழுதிய கடிதத்தில், கொல்கத்தா மருத்துவமனை யில் பெண் மருத்துவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் நீதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருவது வேதனை அளிக்கிறது. நம் அனைவரின் மனசாட்சியையும் உலுக்கிய இந்த வன்முறைச் செயல், ஒரு தனிநபருக்கு எதிரான கொடூரமான குற்றம் மட்டுமல்ல, நமது சமூகத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணின் கண்ணியம் மற்றும் பாதுகாப்பின் மீதான கடுமையான தாக்குதல் ஆகும். இது நம்முடைய சமூகத்தில் ஆழமாக வேரூன்றிய பிரச்சினைகளின் பிரதிபலிப்பு ஆகும்.

நோயாளிகளின் உயிரை பாதுகாக்கக்கூடிய மருத்துவமனை வளாகத்திலேயே இதுபோன்ற கொடூரமான செயல் நடைபெறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்துக்கு மேல் ஆகியும், குற்றவாளிகள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்காத காரணத்தால் மருத்துவர்கள் சாலையில் இறங்கி போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. நீதி கேட்டு நடைபெறும் இந்தப் போராட்டத்துக்கு முழு மனதுடன் என் ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை நீதியின் முன் நிறுத்த மேற்கு வங்க அரசும் சிபிஐ அமைப்பும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் காலத்தில் இதுபோன்ற குற்றங்கள் நடைபெறுவதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.” எனக் குறிப்பிட்டிருந்தார்.

சூர்யகுமார் யாதவும்.. கொல்கத்தா சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய டி20 கிரிக்கெட் அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் இன்ஸ்டாவில் ஸ்டோரி ஒன்றை வைத்துள்ளார். அதில் அவர், “உங்கள் மகள்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்கு பதிலாக உங்கள் மகன், சகோதரர், தந்தை, கணவர் மற்றும் நண்பர்கள் ஆகியோருக்கு பெண்களை எப்படி நடத்துவது என்பதை கற்பியுங்கள்” என தெரிவித்துள்ளார். அவரது இந்த இஸ்டாகிராம் ஸ்டோரி கவனம் பெற்றுள்ளது.

Tags

Next Story