அரசுப்பணியில் சேர்ந்தவர்களின் ஆவணங்களை சரிபார்க்க வேண்டும்: உச்சநீதிமன்றம்

supreme court
மேற்கு வங்காளத்தில் பாசுதேவ் தத்தா என்பவர் கடந்த 1985-ம் ஆண்டு மார்ச் 6-ந் தேதி அரசுப்பணியில் சேர்ந்தார். ஆனால், அவர் 2010-ம் ஆண்டு ஓய்வு பெறுவதற்கு 2 மாதங்களுக்கு முன்பு பணிநீக்கம் செய்யப்பட்டார். ஏனென்றால், அவர் இந்திய குடிமகன் அல்ல என்று கண்டுபிடிக்கப்பட்டது. பணிநீக்கத்தை எதிர்த்து மேற்கு வங்காள நிர்வாக தீர்ப்பாயம், கொல்கத்தா ஐகோர்ட்டு ஆகியவற்றில் பாசுதேவ் தத்தா தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அதை எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அம்மனு, நீதிபதிகள் ஜே.கே.மகேஷ்வரி, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டது. நீதிபதிகள், பாசுதேவ் தத்தாவின் பணிநீக்கத்தை ரத்து செய்து தீர்ப்பு அளித்தனர். தீர்ப்பில் நீதிபதிகள், ஒருவர் அரசுப்பணியில் சேர்ந்த 6 மாதங்களுக்குள் அவரது பின்னணியை சரிபார்க்க வேண்டும். பணியில் சேர்ந்தபோது அவர் தாக்கல் செய்த ஆவணங்களின்படி அவரது குணநலன், பின்னணி, தேசியத்தன்மை, உண்மைத்தன்மை ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். அனைத்து மாநிலங்களின் போலீஸ் அதிகாரிகளும் இப்பணியை செய்ய வேண்டும். நன்கு விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அரசுப்பணியில் சேர்ந்த அந்த நபரின் பின்னணியை சரிபார்த்த பிறகுதான் அவரது பணியை வரன்முறை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
