விபத்தில் காயமடைந்தவர்களை ஆட்சியர் ச.உமா நலம் விசாரித்தார்

விபத்தில் காயமடைந்தவர்களை ஆட்சியர் ச.உமா நலம் விசாரித்தார்

 ஆட்சியர் ச.உமா

நாமக்கல் மாவட்டம், வேலூர் அரசு மருத்துவமனையில் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், அ.கொந்தளம் கிராமம், கருக்கம்பாளையம் வழியாக வேலூர் சென்ற மினி பஸ் கருக்கம்பாளையத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்ததால் அதில் பயணித்த மொத்தம் 35 பயணிகளில் 2 பள்ளி மாணவிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், வாகன ஓட்டுநருக்கு இடுப்பு பகுதியில் அடிப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மற்ற பயணிகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் பாதுகாப்பான முறையில் அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருபவர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா நேரடியாக வேலூர் அரசு மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களை சந்தித்து, நலம் விசாரித்து ஆறுதல் கூறினார். காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கவும் உரிய மருத்துவ சிகிச்சைகள் வழங்கிடவும் மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், விபத்து ஏற்பட்டுள்ள இடத்தில் இனிவரும் காலங்களில் இது போன்று விபத்து ஏற்படாத வகையில் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளையும், விழிப்புணர்வு பதாகைகள் அமைக்க வேண்டுமென வட்டார போக்குவரத்து அலுவலர், நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு உத்தரவிட்டார்.

இந்நிகழ்வில், இணை இயக்குநர் (மருத்துவம்) (பொ) மரு.வாசுதேவன், கோட்ட பொறியாளர் (நெடுஞ்சாலை) திருகுணா, வட்டார போக்குவரத்து அலுவலர் (நாமக்கல் தெற்கு) முருகன், துணை காவல் கண்காணிப்பாளர் (பரமத்தி) ராஜா முரளி மற்றும் மருத்துவர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story