சட்டக்கல்லூரி மாணவர் கொலை - மேலும் இருவர் கைது

சிவகங்கை தாகூர் தெருவை சேர்ந்த முத்துமாரி மகன் சரத்குமார்.இவர் மதுரை சட்டக்கல்லூரியில் இறுதியாண்டு பயின்று வந்தார். சரத்குமார் தனது சகோதரர் இறப்பு நிகழ்விற்காக சொந்த ஊரான வேலாங்குளம் சென்றுள்ளார். இறப்பு வீட்டில் இரு தரப்பு உறவினர்களுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியதில் இரு தரப்பை சேந்தவர்களும் காயமடைந்து சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் ஒரு தரப்பை சேர்ந்தவர்களை காண சரத்குமார் மருத்துவமனைக்கு வந்தபோது மற்றோரு தரப்பினர் அவரை தாக்க துரத்தியதாக கூறப்படும் நிலையில் சரத்குமார் தனது இரு சக்கர வாகனத்தில் தப்பியோடியுள்ளார். பின்னாலேயே அவர்கள் துரத்தி சென்றதாக கூறப்படும் நிலையில் சரத்குமார் மர்மமான முறையில் அல்லூர் பனங்காடி சாலையில் இருசக்கரவாகனம் நொறுங்கிய நிலையில் உயிரிழந்து சடலமாக கிடந்துள்ளார். இந்நிலையில் சரத்குமாரை நான்கு சக்கர வாகனத்தை வைத்து மோதி கொலை செய்திருப்பதாக உறவினர்கள் சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் இச்சம்பவத்தில் தொடர்புடையதாக வேளாங்குளத்தைச் சேர்ந்த அழகு சுந்தரம், தெய்வேந்திரன், தென்னரசு, ராஜவேல், வெற்றிவேந்தன் ஆகிய ஐந்து பேரை ஏற்கனவே கைது செய்துள்ள நிலையில் தற்போது நரேந்திரன், ராஜேஷ் கண்ணன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் மூவரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story