பூலோகநாத சுவாமி கோயிலில் வாஸ்து பூஜை…!

பூலோகநாத சுவாமி கோயிலில் வாஸ்து பூஜை…!
வாஸ்து நாட்களில் நடைபெறும் ஹோமத்தில் கலந்து கொண்டால் வாஸ்து தோஷம் நீங்கும், மற்றவர்களுக்கு மனை, வீடு வாங்கும் யோகம் விரைவில் கிட்டும் என்பது நம்பிக்கை.
திருச்சி காந்தி மார்க்கெட் அருகே உள்ள கீழரண் சாலையில் கோயில் கொண்டிருக்கும் பூலோகநாதர் சுவாமி, வாஸ்து தோஷங்களை நீக்கும் வல்லமை படைத்தவர். மனை, வீடு, பூமி தொடர்பான வாஸ்து நாயகராக திகழ்வதால் வாஸ்து தொடர்பான குறைபாடுகளை சுவாமியிடம் பிரார்த்தனை செய்து கொண்டால் அவை தீரும் என்பது ஐதீகம். பூமி, மனை தொடர்பான நற்காரியங்களுக்கு அதிபதியான வாஸ்து பகவான் பெரும்பாலும் யோக நிலையில் இருப்பார் என்றும், வருடத்தில் சில நாட்கள் மட்டும் விழித்திருப்பதாகவும் சாஸ்திரங்கள் சொல்கின்றன. ஒவ்வொரு வருடமும் இந்த வாஸ்து நாட்களில் இந்த திருக்கோயிலில் சிறப்பு வாஸ்து ஹோமம் நடைபெறுகிறது. புதியதாக வீடு கட்டுபவர்களும், பழைய, புதிய வீட்டில் தோஷம் இருப்பதாக கருதுபவர்களும் வாஸ்து நாட்களில் நடைபெறும் ஹோமத்தில் கலந்து கொண்டால் வாஸ்து தோஷம் நீங்கும், மற்றவர்களுக்கு மனை, வீடு வாங்கும் யோகம் விரைவில் கிட்டும் என்பது நம்பிக்கை. இத்திருக்கோயிலில் சிவபெருமான், பூலோக நாதராக கிழக்கு நோக்கியும், அன்னை ஜெகதாம்பாள் தெற்கு நோக்கியும் அருள் புரிகின்றனர். வாஸ்து ஹோமத்தன்று பூமிக்கடியில் விளையும் பெரும்பாலான கிழங்குகளை கொண்டு விசேஷ கதம்ப கிழங்குகள் சாதம், வாஸ்து பகவானுக்கு சமர்ப்பிக்கப்பட்ட பின்பு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. இவ்வாறு சிறப்புகள் வாய்ந்த இந்த கோவிலில் வருகிற ஆடி மாதம் 11-ம் தேதி 27- 07- 2024 (சனிக்கிழமை) வாஸ்து பூஜை நடைபெறுகிறது. தொடர்ந்து ஆவணி 6ம் தேதி 22-08-2024 மற்றும் ஐப்பசி மாதம் 11ம் தேதி 28-10-2024 கார்த்திகை 8ம் தேதி 23- 11-2024 ஆகிய நாட்களிலும் வாஸ்து பூஜை நடைபெறுகிறது. மேற்கண்ட தேதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை வாஸ்து பூஜை சிறப்பு ஹோமம் நடைபெறுகிறது. இந்தக் கோயிலில் தினமும் அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது. வாஸ்து பூஜையில் பக்தர்கள் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு கோயில் செயல் அலுவலர் மற்றும் உதவி ஆணையர் ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Next Story