பொது மக்களின் கோரிக்கையை ஏற்காமல், தார் சாலை அமைக்கும் பணி

பொது மக்களின் கோரிக்கையை ஏற்காமல்,தார் சாலை அமைக்கும் பணி
செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஒன்றியம், அகரம் கிராமத்திலிருந்து மாம்பாக்கம் வழியாக புத்திரன் கோட்டை இணைப்பு சாலை பல ஆண்டுகளாக சேதமடைந்து இருந்தது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை எழுந்தது. இதனை அடுத்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து தரைப்பலங்களுடன் இந்த சாலையை சீரமைக்க நபார்டு திட்டத்தின் மூலம் ₹3.74 கோடி மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணி கடந்த 2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த சாலை அமைக்கும் பணி துரிதமாக நடைபெறாமல் தாமதப்படுத்தி பணி செய்யப்பட்டதாக அப்பொழுது மக்கள் புகார் கூறுகின்றனர். மேலும் மாம்பாக்கம் கிராமத்தில் சாலையில் மண் சாயில் பரிசோதனை செய்யாமல் சாலை அமைப்பதாகவும், அப்பகுதியில் உள்ள ஆதி திராவிடர்கள் குடியிருப்புகளின் பகுதியில் உயரமான சாலையாக உள்ளதால் மழை நீரானது தாழ்வாக உள்ள குடியிருப்புக்குள் செல்லும் நிலை உள்ளது எனவே மழைநீர் வடிகால் வாயுடன் இந்த சாலையை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் அந்த மாம்பாக்கம் பகுதியில் இயந்திரம் மூலம் சாலை அமைக்கும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது. பொதுமக்கள் கூறிய புகாரை பொருட்படுத்தாமல் இந்தச் சாலை அமைப்பதாக கூறி அப்பகுதி மக்கள் நேற்று பணியை தடுத்து நிறுத்தி நெடுஞ்சாலை துறையின் உயரதிகாரிகள் இந்த சாலை அமைக்கும் பணியை ஆய்வு செய்து தரமான சாலையாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தார் சாலை அமைக்கும் பணியை நிறுத்தினர். இதனால் இந்த சாலை அமைக்கும் பணி தற்போது நின்று போய் உள்ளது. எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரைவாக வந்து இந்த சாலை அமைக்கும் பணியை ஆய்வு செய்து முறையாக வடிகால் வாயுடன் தரமான சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story