காவிரியில் வெள்ள பாதிப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம்

காவிரியில் வெள்ள பாதிப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம்
குமாரபாளையம் காவிரியில் வெள்ள பாதிப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் குமாரபாளையம் தாலுக்கா அலுவலகத்தில் நடந்தது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவிரியில் வெள்ள பாதிப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் குமாரபாளையம் தாலுக்கா அலுவலகத்தில் தாசில்தார் சிவகுமார் தலைமையில் நடந்தது. மாவட்ட வழங்கல் துறை அலுவலரும், மண்டல அலுவலருமான முத்துராமலிங்கம் பங்கேற்று, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தினார். காவிரி நீர் நீர் பிடிப்பு பகுதிகளால் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடகா மாநிலத்தின் கிருஷ்ணராஜா சாகர் அணை மற்றும் கபினி அணை நிரம்பி உபரி நீர் தற்பொழுது காவிரி ஆற்றில் தெரிந்துவிடப்பட்டுள்ளதால் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு ஒரு லட்சம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் மொத்த கொள்ளளவில் 99 சதவீதம் நிரம்பியுள்ள நிலையில், முழுவதுமாக, ஒரு சில தினங்களில் நிரம்பக் கூடும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தற்பொழுது பாசனத்திற்காக காவிரி ஆற்றில் வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றி வரும் சூழ்நிலையில் தொடர்ந்து கர்நாடகாவில் இருந்து நீர் அதிகளவில் திறந்து விடப்பட்டால், அங்கிருந்து வரும் நீர் அப்படியே மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் என்ற நிலை உருவாகியுள்ளது. குமாரபாளையம் காவிரி ஆற்றின் கரையோரம் வெள்ளப்பெருக்கின் போது பாதிக்கப்படக்கூடிய குடியிருப்பு பகுதிகளான அண்ணா நகர், பாலக்கரை, இந்திரா நகர், கலைமகள் வீதி, மணிமேகலை வீதி உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்பவர்களை கணக்கெடுக்கும் பணியும், அவர்கள் வீட்டில் உள்ள மொத்த நபர்களின் கணக்கிடும் பணியும் தொடங்கியுள்ளது. இந்த பணியினை குமாரபாளையம் வருவாய் துறை அலுவலர்களும், நில அளவையர்களும் தொடர்ந்து செய்து வருகின்றனர். இதுவரை 132 வீடுகள் கணக்கெடுப்பு பணி முடிவடைந்து, 4 23 நபர்கள் வசிப்பதாக தெரியவந்துள்ளது. இந்த கூட்டத்தில் நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன், எஸ்.ஐ. தங்கவடிவேலன், ஆர்.ஐ. புவனேஸ்வரி, வி.ஏ.ஒ.க்கள் முருகன், செந்தில், ஜனார்த்தனன், தியாகராஜன், ரஞ்சித்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Next Story