காவிரியில் வெள்ளப்பெருக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

குமாரபாளையத்தில் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருவதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கர்நாடக அணைகள் நிரம்பி மேட்டூருக்கு அதிக அளவில் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், அணையின் கொள்ளளவு போக மீதி வரும் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. காவிரி கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக தங்க, பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன. மாவட்ட கலெக்டர் உமா ஆய்வு செய்து அறிவுரை கூறிய நிலையில், நேற்று போலீஸ் எஸ்.பி. ராஜேஷ்கண்ணா குமாரபாளையம் காவிரி கரையோர பகுதிகளை பார்வையிட்டு, பொதுமக்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வதுடன், இதனை பயன்படுத்தி சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்கவும் அறிவுறுத்தினார். மணிமேகலை தெரு, பாலக்கரை, அண்ணா நகர், புத்தர் தெரு நகராட்சி துவக்கப்பள்ளி, கலைமகள் தெரு நடராஜா திருமண மண்டபம் ஆகிய இடங்களை பார்வையிட்டார். தி.மு.க. மாநில செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், மக்கள் நீதி மய்யம் மகளிரணி அமைப்பாளர் சித்ரா, உஷா, மல்லிகா உள்பட பலரும் உடனிருந்தனர். இரண்டு ஆண்டுகளாக மேட்டூர் கிழக்கு கரை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படாத நிலையில், தற்போது, தண்ணீர் திறந்து விட உள்ளதால், குமாரபாளையம் தட்டான்குட்டை பகுதி உள்ளிட்ட வாய்க்காலில் பொக்லின் மூலம் வாய்க்காலில் விளைந்திருந்த மரங்கள், செடி, கொடிகள், தேங்கிய மழை நீர், சேறும் சகதியும் அகற்றப்பட்டன. அணையிலிருந்து தண்ணீர் வாய்க்காலில் திறந்து விடப்பட்டால், கடைமடை வரை போகும் அளவில் தூர் வாரப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Next Story