ராமநாதபுரம் பருவமழைக்காக முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள்
Ramanathapuram King 24x7 |9 Aug 2024 9:30 AM GMT
கமுதி நெடுஞ்சாலை உட்கோட்டத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் துவக்கம்
கமுதி நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாலங்கள் மற்றும் சாலைகள் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. கமுதி நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தில் சாலைகளின் பாலங்கள் உட்பகுதியில் வளர்ந்துள்ள செடிகளை அகற்றி மழை நீர் சீராக செல்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. சாலை ஓரங்களில் உள்ள முள் செடிகள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் வளைவில் உள்ள செடிகள் அகற்றுதல், சாலை ஓரங்களில் உள்ள பட்டுப்போன மரங்களை அகற்றுதல் என பணி நடந்து வருகிறது. மழைக்காலங்களில் விபத்து ஏற்படும் வகையில் உள்ள குழிகளை மூடுதல் மற்றும் சாலை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலின்படி ராமநாதபுரம் மாவட்ட கோட்ட பொறியாளர் முருகன் ஆலோசனையின் படி வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளவும் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு எவ்வித இடையூரும் ஏற்படாமல் இருக்கவும், கமுதி உட்கோட்டத்தில் உள்ள பெரிய பாலங்கள் மற்றும் சிறிய பாலங்கள் ஆகியவற்றின் நீர் வரத்து பகுதியில் உள்ள செடிகள் அகற்றும் பணி, மணல்மேடு சரி செய்யும் பணி, பாலத்தின் மேல் பகுதியில் மழை நீர் தேங்காமல் இருக்கும் குழாய்கள் அடைத்துள்ள மண்ணை அகற்றுதல் பணி மற்றும் இரவு நேரங்களில் வாகனங்களில் விபத்து ஏற்படாமல் இருக்க பாலங்களின் கைப்பிடி மற்றும் பக்கவாட்டு சுவர்களில் வெள்ளையடித்தல் மற்றும் ஏற்கனவே உள்ள வேகத்தடைகளில் வெள்ளை நிறங்கள் தீட்டுதல் போன்ற பணியினை சாலை பணியாளர்கள் செய்து வருகின்றனர். கமுதி உதவி கோட்ட பொறியாளர் சக்திவேல், உதவி பொறியாளர் பார்த்திபன், சாலை ஆய்வாளர் போ. சூரியகாந்தி ஆகியோர் மேற்பார்வையில் பணிகள் நடைபெற்று வருகிறது.
Next Story